இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: மோடிக்கு ஜெ.கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 27 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்களையும், அவர்களது 71 படகுகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்துவருவது துரதிருஷ்டவசமானது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கடந்த 11 ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடலில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச எல்லை கோடு சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவலையில் உள்ளது. மேலும், இந்தியா இலங்கை ஏற்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து எனது சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்களையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 71 படகுகளையும் விடுவிப்பதற்கு வெளியுறவு துறை மூலம் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications