இலவச அறிவிப்புகள்... தேர்தலை ரத்து செய்து, கவர்னர் ஆட்சி கொண்டுவர 'ஜெ.ஜ.' கட்சி மனு
சென்னை: தேர்தல் விதிகளுக்கு புறம்பாக கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழக சட்டசபைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என ஜெபமணி ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜனதா முன்னணி சார்பில் மதுரை உள்ளிட்ட 69 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜெபமணி ஜனதாதளம் மயிலாப்பூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்நிலையில், ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் தேர்தல் கமிஷனில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அதிமுக, திமுக, பாமக தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கும், தேர்தல் நடத்தை விதிகளுக்கும் எதிரானது.
இலவச அறிவிப்புகள், தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுவதை பாதிக்கிறது, பொதுமக்களும் இலவச அறிவிப்புகள் குறித்தே பேசுகின்றனர். எனவே, விதிகளுக்கு புறம்பாக இலவசங்களை அறிவித்துள்ளதால், தேர்தலை ரத்து செய்து கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications