ராம மோகன் ராவ் மகன், உறவினர்கள் வீட்டில் இருந்து ரூ.30 லட்சம் பணம், 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
தமிழக தலைமைச்செயலாளர் ராம மோகன் ராவின் மகன் விவேக் வீடு, உறவினர்கள் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ்வின் மகன் மற்றும் உறவினர் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 30 லட்சம் ரூபாய் புதிய நோட்டுகள் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட நகையின் அளவு 5 கிலோ என தெரிய வந்துள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவின் வீடு , அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிகாலை முதலே அதிரடி ரெய்டு நடத்தினர்.

ராம மோகன் ராவுக்கு சொந்தமான ஆந்திராவில் உள்ள வீடு தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இங்கு பல முக்கிய ஆவணங்களும் பல கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னை திருவான்மியூரில் உள்ள ராம மோகன் ராவ்வின் மகன் விவேக் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ஏராளமான நகைகள் கைபற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து அந்த நகைகளை மதிப்பீடு செய்ய நகை மதிப்பீட்டாளர்கள் வரவழைக்கப்பட்டனர். கைப்பற்றப்பட்ட நகைகளை மதிப்பீடு செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

மேலும் விஜயவாடா, சித்தூரில் உள்ள ராம மோகன ராவ்வின் உறவினர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ராம மோகன் ராவ் மகன் விவேக்கின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்பட 13 இடங்களில் நடந்த சோதனையில் 30 லட்சம் ரூபாய் புதிய நோட்டுகள் மற்றும் 5 கிலோ நகைகள் கைப்பற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications