வழிப்பறி நாடகமாடிய சேலம் நகை வியாபாரி நண்பர்களுடன் கைது
சேலம்: சேலத்தில் நகை வியாபாரியை வெட்டி விட்டு சுமார் ஏழு லட்சம் மதிப்பிளான நகைகள் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக சம்பந்தப்பட்ட நகை வியாபாரியே திட்டமிட்டு வழிப்பறி நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
சேலம், அம்மாபேட்டை பாலாஜி நகரைச் சேர்ந்த தனபால், சேலம் தருமபுரி, நாமக்கல் போன்ற பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
கடந்த 23-ஆம் தேதி இரவு ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சுங்கச்சாவடி அருகே வழிமறித்த மர்மநபர்கள் நான்கு பேர் தன்னை அரிவாளால் தாக்கி ரூ.7 லட்சம் மதிப்பிலான பழைய நகைகளை பறித்து சென்று விட்டதாக ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் தனபால்.
அதனைத் தொடர்ந்து வெட்டுக் காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். தனபாலைத் தாக்கி விட்டு நகைகளைக் கொள்ளையடித்த திருடர்களைத் தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் தனபாலின் வாக்குமூலத்தில் முரண்பாடு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. சம்பவத்தன்று ஓமலூர் கடைகளில் 15 பவுன் தங்க நகைகளை மட்டுமே வாங்கிய தனபால், போலீஸ் விசாரணையில் 37 பவுன் திருடு போனதாகத் தெரிவித்திருந்தது போலீசாரின் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்தது.
அதனைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் போலீசார் தனபாலிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தனபால் திட்டபப்டி, அவர்களது நண்பர்களே திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது.
இதையடுத்து, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய்ப் புகார் அளித்த தனபால், அவருக்கு உடந்தையாக இருந்த சேலம் சன்னியாசிக்குண்டு பகுதியைச் சேர்ந்த செந்தில் (வயது-25), அய்யனார் (வயது-32) ஆகிய மூவரையும் ஓமலூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.











Click it and Unblock the Notifications