திருச்செந்தூர் கோயில் அருகே நிறுத்தப்பட்ட காரிலிருந்து பணம், நகை திருட்டு
திருச்செந்தூர் முருகன் கோயில் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு, சுவாமி தரிசனம் செய்து திரும்பிய பக்தரின் காரிலிருந்து நகைகள் மற்றும் போன்கள் திருடப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே நிறுத்தியிருந்த காரில் நகை, பணம் திருடப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள படுக்கப்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் கடலூரில் குடும்பத்துடன் வசித்தபடி, அங்கு மாளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் குல தெய்வ வழிபாட்டுக்காக குடும்பத்துடன் காரில் ஊருக்கு வந்த சுடலைமணி பின்னர் திரும்பும் வழியில் திருச்செந்தூருக்கு வந்தார். அங்கு முருகன் கோயில் ஓரத்தில் காரை நிறுத்திய அவர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்னர் நாழி கிணறு மற்றும் கடலில் குளித்து விட்டு கோயிலின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினர்.

காருக்கு தி்ரும்பிய அவர்கள் காரில் வைத்து விட்ட சென்ற நகைகள் மற்றும் போன்கள் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இதில் 14 பவுன் நகை மற்றும் இரண்டு செல்போன்கள், ரூபாய் 16 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறிதது சுடலைமணி உடனடியாக திருச்செந்தூர் கோயிலில் புகார் அளித்தார். எஸ்ஐ ராஜகுமாரி, சிறப்பு எஸ்ஐ சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரை ஆய்வு செய்தனர். இதில் கார் கண்ணாடி உடைக்கப்படாத நிலையில் மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications