மகனைக் கண்டித்த ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து அடித்த பெற்றோர்... ஜெயங்கொண்டானில்!
அரியலூர் : சென்னையைத் தொடர்ந்து ஜெயங்கொண்டானிலும் மாணவனைக் கண்டித்த ஆசிரியர் தாக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியர்கள் 30 பேர் சேர்ந்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் மோகன். கடந்த வெள்ளியன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, பள்ளி வாகனத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிரதீப் என்ற மாணவரைக் கண்டித்துள்ளார் மோகன்.

இதற்கு பதிலடி தரும் விதமாக பள்ளிக்குள் புகுந்த பிரதீப்பின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியர் மோகனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 30 பேர் சேர்ந்து புகார் ஒன்றை அளித்தனர்.
அப்புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மேலக் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் மகன் பிரதீப் ரெமோ (வயது 10) எங்களது பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12-ந் தேதியன்று மாலை பள்ளி முடிந்து மாணவர்களை பள்ளி ஆசிரியர் ஒருவர் துணையுடன் வேனில் அழைத்து சென்று வீட்டினுள் விடுவது வழக்கம்.
சம்பவத்தன்று வேன் சென்று கொண்டிருந்த போது பிரதீப் ரெமோ உட்காராமல் நின்றுகொண்டு விளையாடிக் கொண்டிருந்ததாகவும், இதை பார்த்த உடற்கல்வி ஆசிரியர் மோகன் பிரதீப் ரெமோவிடம் வேனில் செல்லும்போது இப்படியெல்லாம் செய்யக்கூடாது உட்கார்ந்து செல்லுமாறு எச்சரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அதை மாணவன் கேட்காததால் மாணவனை கண்டித்ததாகவும், இதனால் மாணவனின் பெற்றோர் சிலருடன் வந்து பள்ளியில் ஆசிரியர் பணியிலிருக்கும் போது கண்மூடித்தனமாக தாக்கியதால் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், மாணவர் பிரதீப் தரப்பிலும் போலீசில் புகார் ஒன்று அளிக்கப் பட்டுள்ளது. அதில், வேனில் வரும் போது உடற்கல்வி ஆசிரியர் தன்னை அடித்ததாகவும், அதனால் தனக்கு காதில் வலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது பிரதீப் அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இரண்டு தரப்பு புகார்களையும் பெற்றுக் கொண்ட போலீசார், இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் இதேபோல், மகனைத் தாக்கியதாக சென்னையில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் அருளானந்தம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications