சசிகலாவை சந்தித்தார் திவாகரன் மகன் ஜெயானந்த்
திவாகரன் மகன் ஜெயானந்த் சசிகலாவை தி.நகரில் உள்ள இல்லத்தில் சந்தித்தார்.
சென்னை: சசிகலா பரோலில் வெளியே வந்த நிலையில் அவரை திவாகரனின் மகன் ஜெயானந்த் சந்தித்து பேசினார்.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அடைக்கப்பட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
இதுதொடர்பாக சசிகலாவை சிறையில் சந்தித்த தினகரன் அவருடன் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார்.

நடராஜன் நிலை மோசம்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடராஜனுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

பல்லுறுப்பு செயலிழப்பு
நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு அவருக்கு கடந்த 4-ஆம் தேதி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சசிகலா பரோல் மனு
உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராஜனை பார்ப்பதற்காக சசிகலா பரோலில் வர மனு அளித்தார். அந்த மனுவில் சில ஆவணங்கள் சரியில்லாததால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. வேறொரு மனுவை தாக்கல் செய்யவும் கர்நாடக காவல் துறை அறிவுறுத்தியது.

5 நாள்கள் பரோல்
இதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு 5 நாள்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பரோல் கிடைத்தது. இதையடுத்து அவர் நேற்றிரவு சென்னை வந்தார். இன்று அவர் நடராஜனை கவனித்துக் கொள்ள மருத்துவமனைக்கு செல்கிறார்.

அத்தையை சந்தித்த ஜெயானந்த்
சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த அத்தை சசிகலாவை அவர் தங்கியுள்ள தி.நகர் இல்லத்துக்கு சென்று திவாகரன் மகன் ஜெயானந்த் சந்தித்து பேசினார். இவர் சசிகலாவுக்கு எதிராக உள்ள தமிழக அரசை தனது முகநூல் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications