ஜோக்கர் நல்ல திரைப்படம்... புகழ்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்
ஜோக்கர் திரைப்படத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பாரட்டுத் தெரிவித்துள்ளார்.
சென்னை: அண்மையில் வெளியாகிய ஜோக்கர் நல்ல திரைப்படம் என்றும், இதுபோன்ற படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சவாரி திரைப்படத்துக்கு யு சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாததை எதிர்த்து அந்த படத்தின் தயாரிப்பாளர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அதில், வெளிநாடுகளில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்ட கபாலி படத்துக்கு, இந்தியாவில் 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆனால் சவாரி படத்தில் சைக்கோ கதாப்பாத்திரம் உள்ளதால் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என தெரியவில்லை. எனவே, சவாரி படத்துக்கு யு சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்பு நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையின் போது வரிவிலக்கு தொடர்பாக பேசிய நீதிபதி, வரிவிலக்கு கொடுக்கப்பட்ட பல படங்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து மக்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வரி விலக்கு அளித்தாலும் சலுகை மக்களுக்கு போகவில்லை மாறாக டிக்கெட்டுக்கு முழு தொகை வசூலிக்கப்படுவதாகவும், அந்த தொகையும் முழுமையாக ஒருவருக்கு போவதாகவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். கருத்துள்ள படங்களுக்கு வரி விலக்கு கொடுப்பதில் தவறில்லை எனக் கூறிய அவர் சமீபத்தில் வெளிவந்த ஜோக்கர் திரைப்படம் நல்ல படம் எனக் கூறினார்.