எச்.ராஜாவிற்கு ஒரு ஜோசப்.. தமிழிசைக்கு ஒரு சோபியா.. தொடர் நெகட்டிவ் டிரெண்டில் பாஜக!
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பாஜக தொடர்ந்து எதிர்மறையான டிரெண்டில் சிக்கி வருகிறது.
சென்னை: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பாஜக தொடர்ந்து எதிர்மறையான டிரெண்டில் சிக்கி வருகிறது. மெர்சல் பட பிரச்சனை தொடங்கி சோபியா பிரச்சனை வரை வரிசையாக சறுக்கலை அந்த கட்சி சந்தித்து வருகிறது.
நேற்று இரவு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்ற விமானத்தில் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி சோபியா கோஷமிட்டார். இதனால் அவருக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழசை சௌந்தரராஜனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
இதுகுறித்து தமிழிசை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சோபியா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பெயிலில் வெளியாகி உள்ளார் சோபியா.
ஜோசப் விஜய் வைரல்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்திற்கு பாஜகவினால் பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஜி.எஸ்.டிக்கு எதிராக வசனம் இருக்கும் என்று எச்.ராஜா பிரச்சனை செய்து இருந்தார். முக்கியமாக எச்.ராஜா, விஜயின் உண்மையான பெயர் ஜோசப் விஜய், அவர் கிறிஸ்துவர், உண்மை கசக்கத்தான் செய்யும் என்று குறிப்பிட்டு பிரச்சனை பெரிதுபடுத்தினார்.
தமிழிசை சோபியா
அதேபோல் தற்போதும் தமிழிசை சோபியா விஷயத்தை பெரிது படுத்தியுள்ளார். சோபியாவின் பெயரையும், வெளிநாட்டில் அவர் படிப்பதையும் வைத்து, சோபியாவிற்கு பெரிய பின்புலம் இருக்கிறது என்று தமிழிசை குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதேபோல் அவரை தீவிரவாதி என்றும் ஆங்கில செய்தி சேனல் பேட்டியில் கூறியுள்ளார்.
மிகவும் சாதாரண விஷயம்
இந்த இரண்டுமே மிகவும் சாதாரண விஷயம் ஆகும். தமிழகத்தில் ஹிட் அடிக்க வேண்டிய மெர்சலை இந்திய அளவில் எச். ராஜா பிரபலப்படுத்தி பிளாக்பஸ்டர் படமாக்கினார். இப்போது உலக விருதுகளை அந்த படம் வாங்கி வருகிறது. அதேபோல் ஒரு விமான பயணத்தோடு முடிய வேண்டிய கோஷத்தை தேசிய வைரலாக்கி உள்ளார் தமிழிசை.
கெட்ட பெயர்
ஏற்கனவே மத்தியில் உள்ள பாஜக தலைவர் எதிர்பார்க்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பாஜகவிற்கு நல்ல பெயர் இல்லை. சிலை கடத்தலில் வாய்விட்டு எச்.ராஜா கெட்ட பெயர் எடுத்தார். நிர்மலா சீதாராமன், சுப்பிரமணியன் சாமி என வரிசையாக பாஜக தலைவர்கள் தவறாக பேசி மாட்டும் போதெல்லாம் தமிழசையே அவர்களை காப்பாற்றி வந்தார். தற்போது அவரும் சோபியா விஷயத்தில் சறுக்கலை சந்தித்துள்ளார்.