ஜோதிமணி தனித்துப் போட்டியிட்டால் வரவேற்போம்... சொல்கிறார் குஷ்பு!
சென்னை: அரவக்குறிச்சி தொகுதியை தனக்கு ஒதுக்காததால், ஜோதிமணி தனித்துப் போட்டியிட்டால் அதனை வரவேற்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸிற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பற்றிய விபரம் நேற்று வெளியிடப்பட்டது.

இதில், அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வேட்பாளராகும் கனவில் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸைச் சேர்ந்த கரூர் ஜோதிமணி அதிர்ச்சியடைந்தார்.
அதோடு, காங்கிரஸ் தனக்காக அந்தத் தொகுதியை கேட்டு வாங்கவில்லை என கட்சி மேலிடம் மீதும் ஜோதிமணிக்கு கோபம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அத்தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது என அவர் முடிவெடுத்துள்ளார்.
ஏற்கனவே, கோஷ்டிப் பூசலுக்கு பஞ்சமில்லாத காங்கிரஸில், இந்த அரவக்குறிச்சி விவகாரம் புதிய பிரச்சினையாக முளைத்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு, வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "திமுக கூட்டணியில், காங்கிரஸ் வெற்றி பெற்ற சிட்டிங் தொகுதிகளையும், நாங்கள் வலுவாக இருக்கும் தொகுதிகளையும் ஒதுக்கியிருக்கிறார்கள். கட்சிகளின் சிட்டிங் தொகுதிகளை விட்டுக் கொடுத்துவிட வேண்டும் என முன்பே பேசி முடிவு செய்துவிட்டோம்.
ஜோதிமணி கேட்கும் தொகுதியில் பழனிச்சாமி என்பவர் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தலைமையின் முடிவுக்கு எதிராக தனித்து போட்டியிட விரும்பினால், ஜோதிமணி தாராளமாக தனித்துப் போட்டியிடட்டும். அதனை நாங்கள் வரவேற்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டணி, வேட்பாளர் பட்டியல் போன்றவற்றால் மற்ற கட்சிகள் பிரச்சினைகளை சந்தித்து வரும் வேளையில், காங்கிரஸில் இந்த அரவக்குறிச்சி தொகுதி விவகாரம் பூதாகரமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications