ரஜினியை நோக்கிப் பாயும் சுளீர் கேள்விகள்.. பதில் சொல்வாரா?
Recommended Video
சென்னை: போராட்டங்களால் நாடு சுடுகாடாகி விடும் என்று கூறும் ரஜினிகாந்த், ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில் நகரங்கள் சுடுகாடாகி வருகிறதே இதற்கு என்ன பதில் சொல்வார் என்று காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி கேட்டுள்ளார்.
நடிகர் ரஜினியின் பொத்தாம் பொதுவான பேச்சால் மக்கள் கடும் எரிச்சலைடந்துள்ளனர். அரசியல் கட்சிகள், பொதுமக்கள், போராட்டக்களங்களில் உள்ளவர்கள் என அனைத்துத் தரப்பினரின் கோபத்தையும் ஒரு சேர வாங்கிக் கொண்டுள்ளார் ரஜினி.
இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி ரஜினி பேச்சு குறித்து தனது கருத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார்.
இதற்கும் குரல் கொடுக்கலாமே ரஜினி
போராட்டத்தால் ஒரு ஸ்டெர்லைட் மூடப்பட்டு நாடு சுடுகாடாகிவிடும் என்றால் கரூர், திருப்பூர் போன்ற லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் தொழில் நகரங்கள் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, அரசின் அலட்சியத்தால் சுடுகாடாகி வருகிறதே இது பற்றியெல்லாம் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா ரஜினி?
பாஜக - ரஜினி ஒரே குரல்
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பிஜேபியும், இப்போது ரஜினியும் ஒன்றுபோல ' சமூக விரோதிகள்' பற்றிப் பேசுகிறார்கள். தெரியுமென்றால் அவர்களை அடையாளம் காட்டவேண்டியது தானே? போராட்டத்தை எதற்கு கொச்சைப்படுத்த வேண்டும்?படுகொலை செய்யப்பட்ட 13 பேரும் 17வயது மாணவி உட்பட சமூக விரோதிகளா?
சினிமாவில் மட்டும் ஏன் போர்க்கோலம்
போராட்டத்தால் ஒரு சமூகம் சுடுகாடாகுமென்றால் பிறகு எதற்காக திரைப்படங்களில் போர்க்கோலம் போடுகிறீர்கள்? புரட்சி பற்றிப் பேசுகிறீர்கள்? இந்திய சுதந்திரப் போராட்டம் 300 ஆண்டுகள் நடந்திருக்கிறது. அதனால் தான் சுடுகாடாகிவிடாமல் இந்த மண் இன்னும் உயிர்த்திருக்கிறது.அப்பொழுதும் உங்களைப் போன்ற அதிகாரத்தின் ஏவலாள்கள் உங்கள் குருநாதர்கள் ( ஆர் எஸ் எஸ்!) இதேபோல் தான் பேசிவந்தார்கள். ஏன் சுதந்திரப்போராளிகளை காட்டிக் கூட கொடுத்தார்கள்.
உயிர்த்தெழுந்த வரலாறு
ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்ட அடிமை தேசத்தில் போராளிகள் உயிர்த்தெழுந்த வரலாறு நம்முடையது. சுதந்திர மண்ணில் மக்களை அடிமைகளாக இருக்கச் சொல்லாதீர்கள். அதுதான் ஒரு தேசத்தை சுடுகாடாக்கிவிடும். போராட்டங்கள் அல்ல என்று கூறியுள்ளார் ஜோதிமணி.