புதுவையில் விஜயகாந்துக்கு எதிர்ப்பு- பத்திரிகையாளர்கள், அதிமுகவினர் போராட்டம்- பாட்டில்கள் வீச்சு!!
புதுச்சேரி: புதுச்சேரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தங்கியுள்ள ஹோட்டலை முற்றுகையிட்டு அதிமுகவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது ஹோட்டல் மீது அதிமுகவினர் பாட்டில்களையும் செருப்புகளையும் வீசி எதிர்ப்பை தெரிவித்தனர்.
சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் திடீரென நிதானமற்ற நிலையி, பத்திரிகையாளர்களைப் பார்த்து த்தூ......என காறித் துப்பினார் விஜயகாந்த். இது பத்திரிகையாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்ற விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை கிழித்து எறிய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஜெயலலிதாவின் படத்தை தேமுதிகவினர் கிழித்து எறிந்தனர். இது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்தது.
தஞ்சாவூர், கும்பகோணம், திருவண்ணாமலை, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் விஜயகாந்த் கொடும்பாவியை அதிமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதுச்சேரியில் ஹோட்டல் ஒன்றில் விஜயகாந்த் தங்கியிருப்பதை கேள்விபட்ட பத்திரிகையாளர்கள் அங்கு முற்றுகையிட்டனர்.
விஜயகாந்த்தை ஹோட்டலில் இருந்து வெளியேற்றக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அதிமுகவினரும் அங்கு குவிந்தனர். அவர்கள் கைகளில் செருப்பை ஏந்தியபடி விஜயகாந்த்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
விஜயகாந்த்தே வெளியேறு! என்று அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டபடியே ஹோட்டல் மீது பாட்டில்களை வீசினர். ஒருசிலர் ஹோட்டலுக்குள் நுழைந்து விஜயகாந்த்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயற்சித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.