பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தியதால் வசமாக வாங்கி கட்டும் எஸ்.வி.சேகர்
பெண் செய்தியாளர் விவகாரத்தில் ஆளுநருக்கு ஆதரவாக பதிவு போட்டதோடு, பெண் செய்தியாளர்களை அசிங்கப்படுத்தி பதிவிட்ட எஸ்.வி. சேகருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
Recommended Video
சென்னை: பெண் செய்தியாளர்கள் பற்றி அசிங்கமாகவும், கேவலமாகவும் ட்விட்டரில் பதிவிட்ட எஸ்வி சேகருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
பாஜகவைச் சேர்ந்த எச். ராஜா, எஸ்.வி சேகர் உள்ளிட்டோர் மிக கேவலமாக ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பதிவிடும் அவர்கள் கண்டனம் எழுந்த உடன் அதை நீக்கிவிடுகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, ஆளுநரும் அந்த செய்தியாளரிடம் தன் செய்கைக்கு மன்னிப்பு கோரியுள்ளார். தொடர்ச்சியான இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, 'ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும்' என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சிகளிடையே எழ ஆரம்பித்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் மிக மிக அசிங்கமான வார்த்தைகளால் ஒரு பதிவை போட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த உடன் உடனடியாக நீக்கி விட்டார். ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எஸ்.வி சேகருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கனிமொழி கண்டனம்
ஊடகத் துறையில் உள்ள பெண்கள் குறித்து பிஜேபி உறுப்பினர் எஸ்வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது. கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டியது. மற்றொருவரின் பதிவை நான் பகிர்ந்தேன் என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. அந்த முகநூல் பதிவு, அருவருக்கத்தக்க மனநிலையையே காட்டுகிறது. இப்படிப்பட்ட பதிவுகளை போட்டு விட்டு கண்டனம் எழுந்ததும் நீக்குவது தொடர்கதையாகி வருகிறது. பிஜேபி தலைமை எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், இத்தகைய கருத்துக்களுக்கு அவர்களும் உடன்படுகிறார்கள் என்றே பொருள் கொள்ள முடியும்.
செய்தியாளர்கள் கண்டனம்
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கேவலமாக ட்விட்டரில் பதிவிட்ட காமெடிநடிகர் எஸ் வி சேகரை பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில தலைவர் பிஎஸ்டி புருஷோத்தமன் அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித தி வீக் நிருபர் லட்சுமி சுப்பிரமணியன் கன்னத்தை தட்டியது சம்பந்தமாக ஆளுநரே சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரிடம் வருத்தம் தெரிவித்த பிறகு, புதிய பிரச்சினையை உருவாக்கும் நோக்கில் தேவையில்லாமல் காமெடி நடிகர் எஸ் வி சேகர் தனது ட்விட்டர் பதிவில் தனது மேதாவி தனத்தை காண்பிப்பதாக நினைத்து பெண் பத்திரிகையாளர்கள் மீது சேற்றை வாரி இறைத்தது மட்டுமல்லாது, அநாகரிகமாக கருத்தும் தெரிவித்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவரது கருத்து பிற்போக்குத்தனமானது மட்டுமல்ல, பணிக்கு செல்லும் அத்தனை பெண்களையும் இழிவு படுத்துவது போல் ஆகும். இந்த செயலை தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் வன்மையாக கண்டிப்பதுடன், பெண்களை இழிவுபடுத்திய எஸ்வி சேகர் மீது பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.