கோர்ட்டில் கண்ணீர் விட்டு அழுதார் நீதிபதி கிருபாகரன்
கருணை கொலை வழக்கு சம்பந்தமாக கண்ணீர் விட்டு அழுதார் நீதிபதி.
Recommended Video

கடலூர்: இதயத்தை பிழியும் தீர்ப்பை அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியுமா என்ன? பரிதாபமும், கவலையும், சோகமும் பின்னிப் பிணைந்த நிலையில் இந்த வழக்கில் கண்ணீரை தவிர வேறெதுவும் நீதிபதி கிருபாகரனால் உதிர்க்க முடியவில்லை!!
கடலூரை சேர்ந்தவர் திருமேனி. இவர் ஒரு டெய்லர். இவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் பிறந்த போதிருந்தே பேசும் திறன் கிடையாது. மற்றவர்களை அடையாளம் காணவும் முடியாது. மூளையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வலிப்பும் சேர்ந்து கொண்டது. திருமேனி போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை... டாக்டர்களிடம் மகனை அழைத்து சென்றும் எந்த பிரயோஜனமும் இல்லை.

குணப்படுத்தவே முடியாது
பெத்த மகன் கண் எதிரே வலிப்பு வந்து துடிக்கும்போது இவரால் அதனை தாங்கி கொள்ளும் சக்தியும் இல்லை. ஒரு நாளைக்கு 20 முறை வலிப்பு வந்தால் அந்த பிஞ்சு உடம்பு என்னாகும்? மகனை அழைத்து சென்று வந்த அனைத்து டாக்டர்களும் சொல்லிவிட்ட கடைசி வார்த்தை, "குணப்படுத்தவே முடியாது" என்பதுதான்.

கையில் பணம் இல்லை
மன உளைச்சலில் குடும்பம் இடிந்தே போய்விட்டார் திருமேனி. மகனை எங்கு அழைத்து செல்வது, கண்ணெதிரே துடித்து துடித்து விழும் மகனை எப்படி குணமாக்குவது, கையிலோ பணம் இல்லை, வசதியோ குறைவு... எல்லாம் சேர்ந்து திருமேனி நிலைகுலைந்து போனார். தூக்கம், சாப்பாடு இன்றி தவித்தார். குடும்பமே மன உளைச்சலுக்கு ஆளானது. கடைசியாக ஒரு முடிவு எடுத்தார். அதன்படி மகனை கருணை கொலை செய்துவிடுவதுதான்.

மருத்துவ குழு
அதற்காக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அடங்கிய அமர்வு "சிறுவனின் நோய் மற்றும் உடல்நிலை குறித்து முதலில் ஆய்வு செய்யவேண்டும்" என்று கூறி, 3 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவினை அமைத்து உத்தரவிட்டனர். அந்த மருத்துவ குழு சிறுவனை பரிசோதித்துவிட்டு, சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள அரிய நோயை சிகிச்சை மூலமாக குணப்படுத்த முடியாது என கோர்ட்டில் தெரிவித்துவிட்டனர்.

அழுதார் கிருபாகரன்
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி கிருபாகரன் மருத்துவ அறிக்கையை வாசிக்க ஆரம்பித்தார். கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வழிந்தோடியது. அவரால் தொடர்ந்து அந்த அறிக்கையை படிக்க முடியவே இல்லை. கண்ணீர் சிந்தியபடியே படித்து முடித்தார்.அப்போது உடன் இருந்த இன்னொரு நீதிபதி பாஸ்கரனும் தொடர்ந்து கண்கலங்கினார்.

நிதியுதவி வழங்க முடியுமா?
அறிக்கையை படித்த முடித்த பிறகு ஒரு நிசப்தம்... "சிறுவனின் பெற்றோருக்கு மாதம் தோறும் நிதியுதவி வழங்க முடியுமா?" என்று நீதிபதிகள் சோகம் கலந்த வார்த்தைகளில் கேட்டனர். "இது போன்ற பிரச்சனைகளுக்கு என தனி திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ஏன் உருவாக்க கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கண்கலங்கி விட்டனர்
மூளை பாதிப்புக்குள்ளான சிறுவனை குணப்படுத்தவே முடியாது என்று உறுதியாக தெரிந்துவிட்டதையடுத்து நீதிபதிகள் தங்களையும் அறியாமல் அழுதது கண்டு அங்கிருந்தவர்களும் கண்கலங்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications