ஜெ., சசி உள்ளிட்டோரை விடுவித்த நீதிபதி குமாரசாமியின் தப்புக் கணக்கு தீர்ப்பு இதுதான்!
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுவித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரை குற்றவாளிகள் என அறிவித்து 4 ஆண்டுகால சிறை தண்டனை விதித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
1996-ம் ஆண்டு ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

18 ஆண்டுகால நீண்ட விசாரணைக்குப் பின்னர் 2014-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர்.
இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு விவரம்:
- ஜெயலலிதா உள்ளிட்டோர் வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 10 சதவீதத்துக்கும் குறைவு.
- குற்றம்சாட்டப்படி ரூ.66.65 கோடி வருவாய்க்கு மீறிய சொத்துக்களோ அல்லது சிறப்பு நீதிமன்றம் கணக்கின் படி வருவாய்க்கு மீறிய ரூ.53.6 கோடி சொத்துக்களோ ஜெயலலிதா உள்ளிட்டோரிடம் இல்லை.
- ஜெயலலிதா பெயரில் ரூ.2,82,36,812 சொத்து மட்டுமே இருக்கிறது.
- வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றதை வருவாயாக சேர்க்க முடியாது.
- சுதாகரன் திருமண செலவான ரூ.3 கோடியை ஜெயலலிதா செலவழித்தார் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் ஏதும் இல்லை
- சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதை மட்டும் வைத்து அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறிவிட முடியாது.
-ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்ய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் இடையே ஒப்பந்தம் உருவானால்தான் அதை சதியாக கருத வேண்டும்.
- ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துக்கள், நிறுவனங்கள் மற்றும் பிற வருவாய் ரூ.34,76,65,654 ஆக உள்ளது. இது வருவாய்க்கு அதிகமாக ரூ.2,82,36,812 மதிப்பு மட்டுமே.
- வருவாய்க்கு அதிகமான சொத்துக்களின் சதவீதம் 8.12 சதவீதம் தான். இது மிகச் சிறிய தொகையே.
- கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரியின் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் போது, வருவாய்க்கு மீறி 10% வரை அதிக சொத்துகள் வைத்திருக்கும் நபர்கள் விடுதலை செய்யப்படலாம் என கூறியுள்ளது.
- ஆந்திரா அரசும் வருவாய்க்கு அதிகமாக 20% வரை சொத்துக்கள் வைத்திருப்பது அனுமதிக்கக் கூடியதே என தெரிவித்துள்ளது.
- வருவாய்க்கு அதிகமான சொத்து 10%-க்கும் குறைவாக உள்ளதோடு அனுமதிக்கப்பட்ட வரையறைக்குட்பட்டுதான் இருக்கிறது.
- ஆகையால் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் குற்றமற்றவர்; விடுதலை செய்யப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications