கருணாநிதிக்கு 40, துரைமுருகனுக்கு 20 கேள்விகள்.. விசாரணைக்கு அழைக்கும் ரகுபதி கமிஷன்!
சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டுமான முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ரகுபதி கமிஷன், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு சம்மன் விடுத்துள்ளது.
இருவரும் செப்டம்பர் 18ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சம்மனில் கூறப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின்போது கருணாநிதியிடம் 40 கேள்விகளையும், துரைமுருகனிடம் 20 கேள்விகளையும் கமிஷன் கேட்கவுள்ளதாம்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டம்
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், அண்ணா சாலையை ஒட்டியுள்ள அரசினர் ஓமந்தூராரார் தோட்டவளாகத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதியே நேரடியாக இதை மேற்பார்வையிட்டார்.

இடம் மாறிய தலைமைச் செயலகம் - சட்டசபை
இந்தக் கட்டடம் வேகமாக கட்டப்பட்டு அங்கு சட்டசபை இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுக ஆட்சியைப் பிடித்தது.

கிடப்பில் போடப்பட்ட புதிய தலைமைச் செயலகம்
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் புதிய தலைமைச் செயலக செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் சட்டசபை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்கு மாறியது. மேலும் இந்த புதிய தலைமைச் செயலகத்தை அதிமுக அரசு தற்போது பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றி செயல்படுத்தி வருகிறது.

விசாரணைக் கமிஷன்
மேலும் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் இருப்பதாக கூறி நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணைக் கமிஷனையும் அதிமுக அரசு அமைத்தது.

விசாரணை
இந்தக் கமிஷன் இதுவரை அதிகாரிகள், காண்டிராக்டர்கள் என பலரையும் விசாரித்துள்ளது. தற்போது கருணாநிதி, துரைமுருகன் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளது.

செப்டம்பர் 18ம் தேதி
இதுதொடர்பாக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கருணாநிதி, துரைமுருகன் ஆகியோர், 18ம் தேதி காலை, 11.00 மணிக்கு கமிஷன் முன் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வக்காலத்து தாக்கல் செய்ததால் ஆஜராகத் தேவையில்லை
இதுகுறித்து திமுக தரப்பு வழக்கறிஞர் அருண் கூறுகையில், ரகுபதி கமிஷன் முன், இம்மாதம், 18ம் தேதி ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் துரைமுருகன் ஆகியோர் சார்பில் ஆஜராக, வக்காலத்து தாக்கல் செய்துள்ளோம். எனவே, அவர்கள் இருவரும், நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை. கமிஷன், முதல் கட்ட விசாரணையை நடத்துகிறதா, இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதா எனத் தெரியவில்லை. கருணாநிதி, துரைமுருகன் ஆகியோரிடம் கேட்க, கேள்விகளை, கமிஷன் தயார் செய்து வைத்துள்ளது. இந்த கேள்வி படிவங்களைத் தவிர, பிற ஆவணங்களை, இம்மாதம், 16ம் தேதி பார்வையிட்டுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.

2 நாட்களில் எப்படிப் படிப்பது...
கமிஷனின் ஆவணங்கள், பல ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக உள்ளன. இவற்றை, இரு நாட்களில் படித்துவிட்டு, 18ம் தேதி எப்படி கமிஷனில் விவாதிக்க முடியும்? மேலும், கமிஷன் இதுவரை விசாரித்த நபர்களிடம், குறுக்கு விசாரணை நடத்த, எங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அவசரம் அவசரமாக எதையோ செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கில், கமிஷன் செயல்படுகிறது. அரசியல் உள்நோக்கத்துடன், கமிஷன் செயல்படுவதாகவே கருதுகிறோம் என்றார்.

95 சாட்சியங்கள்
ஆனால் கமிஷன் தரப்பில் கூறுகையில், விசாரணை, மிகவும் கவனத்துடன் கையாளப்பட்டது. இதுவரை, உயர் அதிகாரிகள் உட்பட, 24 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 94 சாட்சிகளிடம், சாட்சியம் பெறப்பட்டுள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் விசாரணை முடிந்த உடனே, அறிக்கை தயார் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

3வது கமிஷன்
கருணாநிதி இதற்கு முன்பு சர்க்காரியா கமிஷன், ஜெயின் கமிஷன் ஆகியவற்றின் விசாரணையைச் சந்தித்துள்ளார். தற்போது 3வது கமிஷனாக ரகுபதி கமிஷன் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications