90 வயதாகியும் நாட்டிற்கு உழைக்கும் தலைவர் நல்லக்கண்ணு – நீதிபதி வெ.ராமசுப்ரமணியம்
சென்னை: தன்னுடைய 90 வயதிலும் நாட்டிற்காக அயராது பாடுபடுபவர் ஆர்.நல்லக்கண்ணு என்று நீதிபதி வெ.ராமசுப்ரமணியம் புகழாரம் சூட்டியுள்ளார்.
நீதிநாயகம் சிவராஜ் வி.பாட்டீல் அறக்கட்டளை சார்பில், மனித உரிமை மற்றும் சமூக நீதிக்கு போராடிய மாமனிதர்களுக்கான "நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் விருது" வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, சென்னை ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆகியோருக்கு "நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் விருது-2015" விருதுகளை சென்னை ஹைகோர்ட் நீதிபதி வெ.ராமசுப்பிரமணியம் வழங்கினார்.
வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கான விருதினை அவரது சகோதரரும் முன்னாள் டி.ஜி.பி.யுமான வி.ஆர்.லட்சுமி நாராயணன் பெற்றுக்கொண்டார்.
விருதுகளை வழங்கி வெ.ராமசுப்பிரமணியம், "தனது 90 வயதிலும், நாட்டிற்காக அயராது பாடுபடுபவர் ஆர்.நல்லக்கண்ணு. அவரது எளிமையை பற்றி சொல்வதானால் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நல்லக்கண்ணுக்கு 3 ஆவது வகுப்பு ஏ.சி ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், ரயில் புறப்படும் நேரம் வரை அவர் தனது சீட்டிற்கு செல்லவில்லை.
அப்போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை காணவில்லையே என்று நினைத்து தேடியபோது, நல்லக்கண்ணு சாதாரணமாக தான் பயணிக்கும் பொதுப்பெட்டி அருகே நின்று கொண்டிருந்தாராம்.
பின்னர், அவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைக்கு அழைத்து சென்றுள்ளனர். எளிமையை வியாபாரம் செய்பவர்களும் இந்தியர்கள் தான்.
ஆனால், எளிமை உள்ளத்தின் உள்ளுக்குள் இருந்து தானாக உருவாவது என்று செயலில் காட்டியவர் ஆர்.நல்லக்கண்ணு" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications