”மீண்டும் தங்கபாலு” - சேலத்தில் போட்டியிட வாய்ப்பு
சேலம்: சேலம் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு மீண்டும் போட்டியிடுவார் என தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டதால் வேறு வழியில்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.
பல்வேறு அரசியல் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு என்று இறங்கி விட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இதுவரை எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. காரணம் அவர்களைத் தேடி யாரும் வரவில்லை, அவர்களை சேர்க்கவும் யாரும் விரும்பவில்லை.

இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த முறை தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. பலரும் டெல்லியில் முகாமிட்டு சீட் பெறுவதில் சுறுசுறுப்பாக காணப்பட்டனர்.
ஆனால் இந்த முறை யாருடனும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர்கள் இடையே ஆர்வம் குறைந்து விட்டது.
இதற்கிடையே, சேலம் தொகுதியில் இந்த தேர்தலில் போட்டியிட கே.வி.தங்கபாலு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம், மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் உள்பட 15-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
இது குறித்து கட்சி பிரமுகர் ஒருவரிடம் கேட்ட போது ,"நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். காங்கிரசை பொறுத்தவரை முதலில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்.
அவர் போட்டியிட வில்லை என்றால் அடுத்தபடியாக மாவட்ட தலைவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். அவரும் வேண்டாம் என்றால் அடுத்தபடியாக உள்ளவர்களுக்கு மாநில தலைமை யாருக்கு பரிந்துரை செய்கிறதோ, அவர்களுக்கு வழங்கப்படும்.
அதன்படி சேலம் தொகுதியில் மீண்டும் தங்கபாலு போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. கடந்த முறை அவர் 3 லட்சத்து 33 ஆயிரத்து 969 ஓட்டுகள் பெற்றார். எனவே இந்த முறையும் அவர் போட்டியிடும் வாய்ப்பு இருக்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications