தமிழகத்தின் ஆட்சி டெல்லியில் இருந்து நடக்கிறது... போட்டுத் தாக்கும் கி. வீரமணி!
தமிழகத்தின் ஆட்சி டெல்லியில் இருந்து நடப்பதாலேயே நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரோடு: தமிகத்தின் ஆட்சி டெல்லியில் இருந்து நடப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி, மதசார்பின்மை மாநில உரிமை விளக்க பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியதாவது : டெல்லியில் உள்ளவர்கள் ஆட்டி வைப்பதற்கு ஏற்ப இங்குள்ளவர்கள் ஆடி கொண்டு இருக்கிறார்கள். இதனால் தான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெரியாரின் போராட்டத்தால் அன்று அனைவரும் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடிந்தது. காமராஜர் முதல் நமது தமிழக முதல்வர்கள் கொண்டு வந்த 22 அரசு மருத்துவக்கல்லூரிகளும் நமது மாணவர்களுக்காக கட்டப்பட்டவை. தமிழக அரசின் ஒப்புதல் இன்றி சமூக நீதி எதிராக நீட் தேர்வினை பாஜக அரசு திணித்துள்ளது.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற முதல் 30 பேர் பட்டியலில் ஒரு தமிழர் பெயராவது இருக்கிறதா? பிளஸ்-2 பொது தேர்வில் 119.25 கட்- ஆப் மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவிக்கு இடம் இல்லை.எனவே சமூக நீதிக்கும் மாநில உரிமைக்கும் எதிரான நீட்தேர்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்.
ஹரியானா போன்று கலவரம் ஏற்படுத்தும் போராட்டம் அல்ல நாங்கள் பெரியாரின் வழியில் நடத்தம் போராட்டம். பெரியாரின் கொள்கை இருக்கும் வரை இங்கு மதவாதம் வளரவே முடியாது. பா.ஜ.க நீட்தேர்வு மூலம் மத்திய பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தை கலக்க நினைக்கிறது. இது மிக பெரிய சூழ்ச்சி வலை, அதை முறியடிப்போம் என்று வீரமணி பேசினார்.












Click it and Unblock the Notifications