ஆரம்பித்தது அதிமுக அதகளம்... அமைச்சர் பதவி கேட்டு செங்கோட்டையன் போர்க்கொடி?
தமக்கு அமைச்சர் பதவி தர முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு செங்கோட்டையன் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. தற்போது செங்கோட்டையன் தம்முடைய ஆதரவாளர்களுடன் இது தொடர்பாக ஆலோசித்து வருகிறாராம்.
சென்னை: தமக்கு கணிசமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் அமைச்சர் பதவி கேட்டு முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் போர்க்கொடி தூக்குவதாக தகவல்கள் வருகின்றன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் மிகப் பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது என்பது நிதர்சன உண்மை. அக்கட்சியை முன்னெடுத்துச் செல்லக் கூடிய 2-ம் கட்ட தலைவர்கள் கால்நூற்றாண்டு காலமாகவே இல்லை.
இதை அரசியல் பார்வையாளர்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் உள்ளனர். தற்போது 2-ம் கட்ட தலைவர்கள் இல்லாத விவகாரம் அக்கட்சியை ஆட்டம் காண வைக்கத் தொடங்கியுள்ளது.

ஒதுக்கப்பட்ட செங்கோட்டையன்
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது செயல் பலம் மிக்க பலரும் 'எங்கே வளர்ந்துவிடுவார்களோ? தங்களை மீறிவிடுவார்களோ? ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களாகிவிடுவார்களோ? என்ற சசிகலா தரப்பின் அச்சம் காரணமாக ஒதுக்கி ஒன்றும் இல்லாமல் செய்யப்பட்டனர். அப்படி ஓரம்கட்டப்பட்டவர்களில் செங்கோட்டையனும் ஒருவர்.

அமைச்சர் பதவியே இல்லை...
ஒவ்வொரு முறை அமைச்சரவை மாற்றத்தின் போது செங்கோட்டையன் அமைச்சராவார் என்று பேச்சு அடிபடும். ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பமே அவருக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதில் சசிகலா தரப்பு கவனமாக இருந்தது.

பல அணிகளாக அதிமுக
தற்போது ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா, ஓபிஎஸ் அணி வெளியே தெரிந்தாலும்கள் அதிமுக பல அணிகளாக பிரியத் தொடங்கி உள்ளது. இதன் வெளிப்பாடாகத்தான் செங்கோட்டையன் தமக்கு அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியிருக்கிறார் என்ற செய்தியாகும்.

செங்கோட்டையன் போர்க்கொடி
கணிசமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தமக்கு இருப்பதால் தம்மை அமைச்சராக்க வேண்டும் என்று முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு அவர் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. அப்படி அமைச்சர் பதவி கிடைக்காதபட்சத்தில் என்ன நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் செங்கோட்டையன் தரப்பு ஆலோசித்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications