காணும் பொங்கல் களைகட்டியது: சுற்றுலா தலங்களில் பலத்த கண்காணிப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் களைகட்டியுள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரை, பூங்காக்களில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காணும் பொங்கல் விழா இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் காணும் பொங்கலன்று குடும்பத்துடன் மெரினா, பட்டினப்பாக்கம், எலியட்ஸ், திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை கடற்கரைகள், தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் மிருககாட்சி சாலை போன்ற இடங்களுக்கு சென்று பொதுமக்கள் பொழுதை உற்சாகமாக கழிப்பார்கள்.
பொங்கல் பண்டிகையின் 4-வது நாள் கொண்டாட்டமான காணும் பொங்கல், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சென்னை மெரினா கடற்கரைக்கு வருவது வழக்கம். பலர் மாட்டு வண்டிகளிலும் வருவார்கள். கடற்கரை மணல், மர நிழல், புல்தரைகளில் வட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவது, விளையாடுவது என அமர்க்களப்படுத்துவார்கள்.

சென்னை மெரீனாவில்
காணும் பொங்கலான இன்று சென்னை மெரினா கடற்கரையில் காலைமுதலே ஏராளமானோர் குவியத்தொடங்கியுள்ளனர். நேரம் செல்லச் செல்ல பல்லாயிக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் வசதிக்காக மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இதனால் சாலைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

குளிக்க அனுமதியில்லை
மெரினா கடற்கரை முழுவதும் சவுக்கு கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதை தாண்டி யாரும் கடலுக்குள் செல்லக்கூடாது. இன்று கடலில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் 4 இடங்களில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன.

10 கண்காணிப்பு கோபுரங்கள்
கூட்ட நெரிசலை பயன்படுத்தி அத்துமீறி செயல்படுபவர்களை கண்காணிக்கும் வகையிலும், கடலில் குளிப்பதை தடுக்கும் வகையிலும் போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்.
கூட்டத்தை கண்காணிப்பதற்காகவே 10 கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவைகளில் நவீன பைனாகுலர்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மாறுவேடங்களில்
குதிரைப்படை போலீசார் மற்றும் கடற்கரை வாகனமான ‘பீச் பக்' ஆகியவற்றின் மூலமும் போலீசார் கண்காணிக்க உள்ளனர். மேலும், மாறு வேடங்களிலும் போலீசார் கூட்டத்துடன் கூட்டமாக சுற்றிவந்து கண்காணிப்பார்கள்.

முதலுதவிக்கு
கடற்கரை முழுவதும் 50 நகரும் கழிப்பறைகள், தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தீயணைப்பு மீட்பு படையினர், 50 நீச்சல் வீரர்கள், ஆம்புலன்சுகள் நிறுத்தப்படுவதுடன், முதலுதவி முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

குவியும் குப்பைகள்
மெரீனா கடற்கரையில் மலையாக குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் இன்று பணியமர்த்தப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. எலியட் கடற்கரையில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு
கடற்கரைக்கு குழந்தைகளை அழைத்துவருபவர்கள் தொலைபேசி எண்கள், முகவரிகள் அடங்கிய பாதுகாப்பு பட்டை ஒன்றினை அணிவித்து வருமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கூட்டத்தில் குழந்தைகள் தவறும் பட்சத்தில் எளிதாக அவர்களை மீட்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாதலங்களில்
சென்னை கடற்கரையில் மட்டும் ஆயிரம் போலீசாரும், சென்னையில் உள்ள பூங்காக்கள், வண்டலூர் மிருககாட்சி சாலை உள்பட மாநகர் முழுவதும் 3 ஆயிரம் போலீசாரும் ஒரு இணை கமிஷனர், 4 துணை கமிஷனர்கள், 12 உதவி கமிஷனர்களின் மேற்பார்வையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பழவேற்காடு
பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு மிகமுக்கியமான சுற்றுலா பகுதியாகும். இங்கு டச்சு கல்லறை, நிழற்கடிகாரம், பறவைகள் சரணாலயம், கலங்கரை விளக்கம், நீண்ட அழகிய கடற்கரை, ஏரியும் கடலும் இயற்கையாக இணையும் முகத்துவாரம் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. காணும் பொங்கல் நாளில் இங்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்வதற்கும், பழவேற்காடு கடலில் குளிக்கவும் தடை விதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications