திமுக ஆட்சியில் உருவான காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதிமுக ஆட்சியில் கையகப்படுத்திய அதானி... !

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த திமுக ஆட்சியின்போது கையெழுத்தாகி உருவான திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது.

இது சென்னை துறைமுகத்தை கிடப்பில் போடும் திட்டமாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி ஏற்கனவே எச்சரித்திருந்ததன் பின்னணியில் இந்த புதிய கையகப்படுத்துதல் நடந்துள்ளது.

முன்னதாக நேற்றுதான் திமுக தலைவர் கருணாநிதி இதுதொடர்பாக நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். அதானிக்காக சென்னை துறைமுகத்தை செயலிழக்க வைக்கிறார்கள் என்று அதில் சாடியிருந்தார் கருணாநிதி.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

சென்னையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி என்ற இடத்தில் இந்த துறைமுகம் உள்ளது. இந்தத் துறைமுகத்தின் செயல்பாடுகளை தற்போது அதானி துறைமுகங்கள் ஏற்றுள்ளது. இதுதொடர்பாக அந்தத் துறைமுகத்தை பராமரித்து வரும் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்துடன் அது ஒப்பந்தம் செய்துள்ளது.

அதானி சொல்வது என்ன?

அதானி சொல்வது என்ன?

இதுதொடர்பாக அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் மும்பை பங்குச் சந்தையிடம் சமர்ப்பித்துள்ள தகவலில் காட்டுப்பள்ளி துறைமுக செயல்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் எல் அன்ட் டி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அக்போடர் 2015 முதல் ஒரு மாதத்திற்கு இது அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாப நஷ்டம் அதானிக்கே

லாப நஷ்டம் அதானிக்கே

இந்தக் காலத்தில் ஏற்படும் லாப, நஷ்டம் அதானி குழுமத்திற்குப் போய்ச் சேரும். விரிவான ஒப்பந்தங்கள் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் அன்ட் டி சொல்வது என்ன?

எல் அன்ட் டி சொல்வது என்ன?

மும்பை பங்குச் சந்தையில் எல் அன்ட் டி நிறுவனம் தாக்கல் செய்துள்ள இன்னொரு தகவலில், காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தை தொடர்ந்து எல் அன்ட் டி நிறுவனமே செயல்படுத்தி பயன்படுத்தி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி சொன்னது என்ன?

கருணாநிதி சொன்னது என்ன?

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருந்த அறிக்கையில், 7-1-2013 அன்று முதலமைச்சர் கொடைநாட்டிலிருந்து வெளியிட்ட ஒரு அறிவிப்பில் மீனவர்களின் நலன் காப்பதற்காக காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து கப்பல் கட்டும் தளம் ஒன்றினை நிர்மாணிப்பதாகத் தெரிவித்தார். உண்மையில் அந்தத் திட்டம் யாருடைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது?

திமுக ஆட்சிக்காலத்தில்

திமுக ஆட்சிக்காலத்தில்

திருவள்ளூர் மாவட்டத்தில், காட்டுப் பள்ளியில் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 15-4-2008 அன்று என் முன்னிலையிலேதான் கையெழுத்தானது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமும் இணைந்து 3,068 கோடி ரூபாய் முதலீட்டில் அந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு பிப்ரவரியிலேயே பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதைப் பார்ப்போம்.

சென்னை துறைமுகம்

சென்னை துறைமுகம்

இந்தியாவில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் இரண்டாவது பெரியதும், மூன்றாவது பழையதுமான துறைமுகம் தான் சென்னைத் துறைமுகம். 2008-2009இல் சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் இந்தியாவில் 17 சதவிகிதம் சென்னைத் துறைமுகத்தில் தான் கையாளப்பட்டது. இந்தத் துறைமுகத்தில் கையாளப்பட்ட பொருள்களின் புள்ளி விவரத்தைப் பார்த்தால், 2000-2001ஆம் ஆண்டு 412 லட்சம் டன்; 2002-2003ஆம் ஆண்டு 336 லட்சம் டன்; 2004-2005ஆம் ஆண்டு 438 லட்சம் டன்; 2006-2007ஆம் ஆண்டு (தி.மு.கழக ஆட்சியில்) 534 லட்சம் டன்; 2008-2009ஆம் ஆண்டு 574 லட்சம் டன்; 2010-2011ஆம் ஆண்டு 614 லட்சம் டன்; 2012-2013ஆம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியில் 534 லட்சம் டன்; 2014-2015ஆம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியில் 525 லட்சம் டன்களாகும். இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து அ.தி.மு.க. ஆட்சியில் சென்னைத் துறைமுகத்தில் கையாளப்பட்ட பொருள்களின் அளவும், செயல்திறனும் குறைந்துள்ளதைக் காணலாம்.

தனியாருக்கு சாதகமாக - அதானிக்கு ஆதரவாக

தனியாருக்கு சாதகமாக - அதானிக்கு ஆதரவாக

அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சியைத் திட்டமிட்டுத் தடுத்ததற்கும் காரணம். புதியதாக காட்டுப்பள்ளி என்ற இடத்தில் கட்டப்பட்ட தனியார் துறைமுகம் எல் அண்ட் டி நிறுவனத்திற்கு உரிமை உடையதாக இருந்தது. இந்தக் காட்டுப் பள்ளி துறைமுகத்தைத் தான் இந்தியப் பிரதமருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் மிகவும் நெருக்கமான குஜராத் அதானி குழுமம் எடுத்துக் கொள்ளப் போவதாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் அதற்கான மாற்றங்கள் பற்றி முடிவு தெரிய வரும் என்றும், நேற்று (27-9-2015) "இந்து" ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அவசரம் அவசரமாக ஒப்பந்தம் போட்ட ஜெ. அரசு

அவசரம் அவசரமாக ஒப்பந்தம் போட்ட ஜெ. அரசு

இந்த அதானி குழுமத்திற்குத் தான் ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா அரசினால் அவசர அவசரமாக சூரிய மின்சக்தி தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதிலும் கூட, மற்ற தனியாரிடம் குறைந்த விலையில் சூரிய மின் சக்தி கிடைக்கும்போது, அதிக அளவுக்கு விலை கொடுத்து நீண்ட காலத்திற்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுள்ளது என்று பலராலும் குற்றம் சாட்டப்பட்டது. அதானி குழுமம் ஏற்கனவே இந்தியாவில் பத்து துறைமுகங்களைக் கையாண்டு வருகிறது. அவற்றில் ஒன்று தான் எண்ணுர் காமராஜர் துறைமுகம். அந்தத் துறைமுகத்திற்கு மிக அருகிலே தான் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைந்திருக்கிறது.

உள்நோக்கம் காரணமா?

உள்நோக்கம் காரணமா?

தற்போது அதே அதானி குழுமம் தான், காட்டுப்பள்ளி துறைமுகத்தையும் எடுத்துக் கொள்ளப் போவதாக வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு, முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தை நலிவடைந்திடச் செய்ததே அதானி குழுமத்திற்கு உதவிடும் உள்நோக்கத்தோடு தானா என்ற சந்தேகம் அனைவருடைய மனதிலும் எழத் தான் செய்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சியைத் திட்டமிட்டுத் தடுத்ததற்கும் காரணம், அதானி குழுமம் ஆர்வம் காட்டும் காட்டுப்பள்ளித் துறைமுகத்தையும், தனியாருக்குச் சொந்தமான கிருஷ்ணா பட்டணம் துறைமுகத்தையும் வளர்ப்பதற்காகத் தானா? தனியார் சிலருக்கு உதவுவதற்காக, பொதுத் துறை நிறுவனங்களை வீழ்த்துவது பற்றிய மர்மங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிச்சத்திற்கு வரத் தான் போகின்றன என்று கூறியிருந்தார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+