"கபாலி"யைப் பாத்தீங்க.. அவர் படிச்ச "பாலையா"வைப் பாத்தீங்களா?
சென்னை: கபாலி படத்தின் அறிமுகக் காட்சியை எத்தனை பேர் உன்னிப்பாக கவனித்தார்கள் என்று தெரியவில்லை. சில விநாடிகளே வரும் காட்சி அது. அந்தக் காட்சி இப்போது தெலுங்கானாவில் படு வேகமாக பிரபலமாகி வருகிறது.
தமிழ் கபாலியில் வந்த காட்சி எப்படி தெலுங்கானாவில் பிரபலமாகியது என்று ஆச்சரியம் வரலாம். ஆனால், அந்த காட்சியில் இடம் பெற்ற நூல் தெலுங்கானாவைச் சேர்ந்த தலித் எழுத்தாளர் ஒய்.பி. சத்தியநாராயணா எழுதிய My Father Balaiah என்ற நூலாகும்.
கபாலி அறிமுகக் காட்சியில் சிறையில் இருக்கும் ரஜினிகாந்த் இந்த நூலைப் படித்து பின்னர் மூடி வைத்து அதை பார்ப்பது போலத்தான் முதல் காட்சியை வைத்துள்ளார் இயக்குநர் பா ரஞ்சித்.

தெலுங்கானா புத்தகம்
தற்போது இந்தக் காட்சி தெலுங்கானாவில் படு வேகமாக பிரபலமாகி விட்டது. பலரும் இந்த நூலைப் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர். இதை வாங்கவும் ஆரம்பித்துள்ளனர். இந்த நூல் குறித்த ஆர்வமும் அங்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே அந்த நூல் அங்கு பிரபலமானதுதான். ஆனால் தற்போது கபாலி புண்ணியத்தால் மேலும் பிரபலமாகியுள்ளது.

தமிழகத்திலும் பேசப்படுகிறது
அங்கு மட்டுமல்ல தமிழகத்திலும் கூட இந்த நூல் தற்போது பேசப்பட ஆரம்பித்துள்ளது. என்ன நூல் இது என்று பலரும் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து விவரம் தெரிந்தோர் அது குறித்து பேஸ்புக் உள்ளிட்டவற்றில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

தலித் எழுத்தாளர்
தலித் எழுத்தாளரான ஒய்.பி. சத்தியநாராயணா எழுதிய இந்த நூல் சத்தியநாராணாவின் தாத்தாவான நரசய்யாவின் குடும்பம் குறித்து விவரிக்கிறது. நரசய்யாதான் அந்தக் குடும்பத்தின் தலைவர். தலித் வகுப்பைச் சேர்ந்த அவர் ஹைதராபாத் நிஜாமிடமிருந்து இளம் வயதில் 50 ஏக்கர் நிலத்தைப் பெறுகிறார். தானமாக தரப்பட்ட அந்த நிலத்தை அவருக்கு முழுமையாக தராமல் உயர் ஜாதியைச் சேர்ந்த உள்ளூர்க்காரர் 48 ஏக்கர் நிலத்தை தான் அபகரித்துக் கொண்டு வெறும் 2 ஏக்கரை மட்டும் தருகிறார்.

நரசய்யாவின் கதை
ஒரு கட்டத்தில் குடும்பம் கூட நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார் நரசய்யா. பின்னர் தனது மனைவி, பாலையா (சத்தியநாராயணாவின் தந்தை) உள்ளிட்ட தனது மகன்களுடன் ஊரை விட்டும் வெளியேறுகிறார். ஆனால் தனது கடின உழைப்பாலும், கல்வியின் பலத்தாலும் அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதை இந்த நூல் சொல்கிறது.

2011ல் வெளியான புத்தகம்
2011ம் ஆண்டு இந்தப் புத்தகத்தை எழுதினார் சத்தியநாராணா. ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களையும், போராட்டங்களையும் இதில் விவரித்திருப்பார் சத்தியநாராயணா. இந்த நூலைத்தான் தனது அறிமுகக் காட்சியில் வைத்துள்ளார் இயக்குநர் ரஞ்சித்.

கரீம்நகர் பேராசிரியர்
கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணா. ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். கபாலி படத்தில் தனது நூல் காட்டப்பட்டது குறித்து சத்தியநாராயணா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கபாலி மூலமாக பரவட்டும்
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது புத்தகம் கல்வி அளவில் மட்டுமே இப்போது பிரபலமாக உள்ளது. எனது நூலை வைத்து ஒருவர் ஆய்வு செய்துள்ளார். புனே பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஏல், ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகங்களில் இடம் பெற்றுள்ளது. கபாலி படம் மூலமாக எனது நூல் வீடுகள் தோறும் பரவும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தலித்துகள் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது
மேலும் அவர் கூறுகையில் ஜாதி இந்து முறை இருக்கும் வரை ஜாதி வெறியும் ஒழியாது. ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றம் என்பது நிதானமாகத்தான் இருக்கும். சிலர்தான் தனிப்பட்ட முறையில் போராடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு தலித்தும் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்று விரக்தியுடன் கூறுகிறார் சத்தியநாராயணா.












Click it and Unblock the Notifications