பார்த்ததுமே பூரித்துப்போன உதயநிதி ஸ்டாலின்.. கள்ளக்குறிச்சி எம்.பி கொடுத்த நினைவுப்பரிசு!
கள்ளக்குறிச்சி: நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குச் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கள்ளக்குறிச்சி எம்.பி மலையரசன் வழங்கிய நினைவுப்பரிசு கவனம் ஈர்த்துள்ளது. ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாகப் பாடாதது சர்ச்சைக்கு உள்ளான நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் நினைவுப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்தி மாதம் நிறைவுக் கொண்டாட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரிகளை விட்டுவிட்டு பாடிய சம்பவம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும், மக்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநர் ரவியை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தும் வருகின்றனர். இந்த நிலையில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. வரிகளை நீக்கினால் 'திராவிடம்' வீழாது. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்" என இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து காட்டமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் அரசு நிகழ்வுகள், கட்சி நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்கள் நலப்பணிகள், அரசுத் திட்டங்கள் குறித்த மாவட்ட ஆய்வுக்கூட்டத்தை ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமான கள்ளக்குறிச்சியில், தமிழக அரசு செயல்படுத்துகிற திட்டங்களின் தற்போதைய நிலை, மாவட்டத் தலைநகர் முதல் கிராம ஊராட்சிகள் வரை அரசுத் திட்டங்கள் சென்று சேரும் விதம் குறித்து அதிகாரிகள், அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
துறைவாரியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் தரப்பில் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு சீரிய முறையில் திட்டங்களை செயல்படுத்திட ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கள்ளக்குறிச்சி எம்.பி மலையரசன் ஒரு நினைவுப்பரிசை வழங்கினார். "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற தமிழ்த்தாய் வாழ்த்து வாசகம் பொறிக்கப்பட்ட சட்டகம் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரிகளை பாடாமல் விட்ட நிலையில், அந்த வாசகம் பொறிக்கப்பட்ட புகைப்பட சட்டகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கி உள்ளனர். இந்த நினைவுப் பரிசை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார் துணை முதல்வர் உதயநிதி.
முன்னதாக, கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்ட ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க செல்லும் வழியில், மணலூர்பேட்டை, தியாகதுருகம் - வீரசோழபுரம் டோல்கேட், கள்ளக்குறிச்சி நகரம் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் திரளாக கூடி நின்று துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications