கள்ளக்குறிச்சியில் கிராம பெண் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை.. SIR பணி பிரஷரால் முடிவு என புகார்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம பெண் உதவியாளர் ஜாகிதா பேகம் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் அவர் தற்கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தங்கள் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் ஜாகிதா பேகம். இவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தான் ஜாகிதா பேகம் இன்று தூக்கில் பிணமாக தொங்கினார். முதற்கட்ட விசாரணையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும் தற்கொலைக்கான காரணமாக என்ன என்பது தெரியவில்லை.
அதேவேளையில் குடும்பத்தினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால் ஜாகிதா பேகம் மனஅழுத்தத்துக்கு உள்ளானதாகவும், அதனால் அவர் தற்கொலை செய்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 4ம் தேதி வாக்காளர் பட்டியில் தீவிர திருத்தம் தொடங்கியது. இந்த பணி அடுத்த மாதம் (டிசம்பர் ) 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியில் பெயர் இருப்பவர்களுக்கு விண்ணப்ப படிவம் வாங்கி அதனை பூர்த்தியிட்டு திரும்ப பெறும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விண்ணப்பத்தை முறைப்படி நிரப்பி கொடுத்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும். இல்லாவிட்டால் ஓட்டுரிமை பறிக்கப்படும். இதனால் தான் எதிர்க்கட்சிகள் இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் வாக்காளர்களை தேடி தேடி விண்ணப்ப படிவம் வழங்குவது ஊழியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாவதாகவும் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை வருவாய் துறையினர் ல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், சர்வேயர்கள், கள உதவியாளர்கள் என ஏறத்தாழ 42 ஆயிரம் பேர் இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து மாவட்டங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது. இப்படியான சூழலில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம பெண் உதவியாளர் தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications