விஜய்யை வீட்டுக்கே சென்று சந்தித்த கமல்ஹாசன்.. 30 நிமிடம் நடந்த சந்திப்பு! பேசப்பட்டது என்ன?
சென்னை: தமிழக முதல்வர் விஜய்யை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டுக்கு சென்ற கமல்ஹாசன், சுமார் 30 நிமிடங்கள் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பல்வேறு கனவுகளை விஜய் பேசியதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்த் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக அரசின் ஆதரவும் அரவணைப்பும் அவசியம் என வலியுறுத்திய கமல்ஹாசன், திரைப்படத் துறையை மேம்படுத்தும் வகையில் 6 முக்கிய கோரிக்கைகளை முதல்வர் விஜய்யிடம் வழங்கியதாக கூறியுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. தமிழ்த் திரைப்படத் துறைக்கு புதிய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

விஜய்யை சந்தித்த கமல்ஹாசன்
திமுக கூட்டணியில் நீடிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சில தினங்களாக அமெரிக்காவில் இருந்த அவர், அண்மையில்தான் சென்னைக்குத் திரும்பியிருந்தார். சென்னை வந்ததும், கமல்ஹாசன் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர், முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, சில முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.
விஜய்யை சந்தித்த பிறகு கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
6 முக்கிய கோரிக்கை
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்" என்று பதிவிட்டு இருந்தார்.
கமல்ஹாசன் - விஜய் சந்திப்பு குறித்து சமூக வலைத்தளங்களிலும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணியில் கமல் நீடித்தாலும், முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தது அவரது பெருந்தன்மையை காட்டுவதாகவும், கருத்து முரண்பாடுகள் இருப்பினும் கமலின் பண்பு மிகப்பெரியது எனவும் கூறி வருகின்றனர்.
தன் துறையை சேர்ந்தவர்
சினிமா துறையை மேம்படுத்த கமல்ஹாசன் முன்வைத்த கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய்யும் திரையுலகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவற்றை பரிசீலித்து தீர்வு காண்பார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 'தன் துறைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி' எனக் கமல்ஹாசன் கூறியிருந்தார். விஜய் தன் திரைத்துறை வாழ்க்கையில் பல கஷ்டங்களையும் போராட்டங்களையும் கடந்து வந்தவர். நடிகராகப் பயணித்தாலும், தயாரிப்பாளர்கள், கலைஞர்களின் போராட்டங்களைப் புரிந்தவர். எனவே, கமல்ஹாசனின் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என கூறப்படுகிறது.
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதும் முதல் நாளிலேயே சென்னை பெரியார் திடலுக்கு சென்று, கி வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன்பிறகு மறுநாள் முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை நேரில் அவரது வீட்டுக்கே சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இதேபோன்று அன்றைய தினமே மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதனையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை அவரது வீட்டுக்கே நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதிமுகவிலும் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகிய எடப்பாடி எதிர்ப்பு தலைவர்களை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக அடுத்தடுத்து விஜய் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை விஜய் சந்திக்காமல் இருந்தார். ரஜினிகாந்த் விஜய்யை சந்திக்க விரும்பாமல் பெங்களூர் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதே நேரம் கமல்ஹாசன் வெளியூர் சென்றிருந்ததால் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது.














Click it and Unblock the Notifications