உங்களைத் திருத்திக்கங்க.. சரியான ஆளை தேர்ந்தெடுங்கள்.. கமல் பேச்சால் அதிர்ந்த அரங்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்தடி சாக்கில் நடிகர் கமல் ஹாசன் ஆட்சியாளர்களை வம்புக்கு இழுத்தார்.
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன் சைக்கிள் கேப்பில் ஆட்சியாளர்கள் குறித்தும், வாக்குரிமை குறித்தும் பேசினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி கடந்த ஜூன் 27-ஆம் தேதி தொடங்கியது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் 100 நாள்கள் தங்கி அங்கு நேரும் இடர்பாடுகளையும், ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் டாஸ்குகளையும் செவ்வனே செய்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்று கடைசி வரை அந்த வீட்டில் தங்கும் போட்டியாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
ஆரம்பத்தில் சூடு பிடித்த இந்த நிகழ்ச்சி ஓவியா வெளியேறிய பின்னர் கொஞ்சம் டல்லடித்தது. எனினும் தற்போது கொஞ்சம் பிக்அப் ஆகியுள்ளது.
அரசியல் கட்சி தொடங்கும்
இந்நிலையில் சமீபகாலங்களில் நடிகர் கமல் அரசியல் பேசி வருகிறார். மேலும் அவர் தனிக் கட்சியை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வப்போது வாக்குரிமையை சரியாக பயன்படுத்துங்கள் என்று மக்களுக்கு கூறிவருகிறார்.
ஆட்சியாளர்களை சீண்டும் கமல்
இதுவரை டுவிட்டரில் ஆட்சியாளர்களை சீண்டி வந்த கமல், கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சீறி வருகிறார். நீட் தேர்வுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பேசி வருகிறார்.
85-ஆவது நாள்
இந்த நிகழ்ச்சி நேற்று 85-ஆம் நாளை எட்டியது. இதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்கே சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அப்போது சினேகன், நடிகர் கமலுக்காக எழுதிய கவிதையை வாசித்தார்.
பிக்பாஸிலும் அரசியல்
போட்டியாளர்கள் பொதுமக்களின் வாக்களிப்பு மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் இறுதியின் போது நடிகர் கமல் பேசுகையில், இன்னும் நிகழ்ச்சி முடிய சில நாள்களே உள்ளது. சரியான ஆளை தேர்ந்தெடுப்பீர்கள் என்று முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதுவரை சரியாகத்தான் செய்தீர்கள். ஓரிரு முறை வேண்டுமானாலும் ஏதாவது தவறு நடந்திருக்கலாம்.
திருந்தும் நேரம்
இது திருந்திக் கொள்ளும் நேரம், செய்வீர்கள் என நம்புகிறேன் என்றார். சிறிது நேரம் அமைதி காத்த கமல் தனக்கே உரிய பாணியில், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேன். வேறு மாதிரியான அர்த்தங்களை நீங்கள் கற்பித்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. எனக்கு கொடுத்த வேலையை செய்கிறேன். நடுவில் எனக்கு தோன்றியதை சொல்கிறேன். தவறா நினைக்காதீங்கள் என்றார்.
கரகோஷம்
இவர் இவ்வாறு கூறிய போது அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது. மீண்டும் தொடர்ந்த கமல், ஏங்க தப்பா நெனச்சிக்காதீங்க.. நான் உங்கள சொல்லல. வேற ஆளுங்கள சொல்றேன் என்றார். இதன் மூலம் நடிகர் கமல், வாக்குரிமையை சரியாக பயன்படுத்துங்கள் என்று மக்களிடம் மறைமுகமாக கூறினார்.