கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்காதீங்க!... கமல் தாக்கு
கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கக் கூடாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது என்று கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பாஜகவின் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரனின் நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி விஜயேந்திரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது விஜயேந்திரருக்கு தனிமேடை அமைக்கப்பட்டிருந்தது.
அப்போது நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதற்கு ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்ற போதும் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
தமிழகம் முழுவதும் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்களும் கண்டனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர். விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது விஜயேந்திரர் விவகாரம் குறித்து கமலிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடினால் எழுந்து நிற்பது என் கடமை. தியானம் செய்வது விஜயேந்திரரின் கடமை. தியானம் செய்வது எப்படி கடமையோ அதுபோல் எழுந்து நிற்பதும் கடமைதான்.
தமிழ்த்தாய் வாழ்த்து கண்ட இடங்களில் இசைக்கக் கூடாது என்றும் கமல் அதிரடியாக தெரிவித்தார். அவர் இந்த வார்த்தையை உள்நோக்கத்துடன் கூறியதாகவே பார்க்கப்படுகிறது.