மக்கள் செல்வாக்கு என்ன?... ரசிகர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை
தான் அரசியலுக்கு வந்தால் தனக்கு இருக்கும் ஆதரவு குறித்து ரசிகர் நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தனது வீட்டில் ரசிகர் நற்பணி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துவிட்டது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் கமல்ஹாசன். டுவிட்டரில் அவ்வப்போது கருத்துகளை பதிவிட்டு ஆட்சியாளர்களை விமர்சித்தும் வருகிறார் கமல்ஹாசன்.

தமிழக அமைச்சர்களும் வெளியே இருந்து கொண்டு ஆட்சி குறித்து குறை கூறாமல் அரசியல் களத்தில் வந்து கமல் பேச வேண்டும் என்று சவால் விட்டனர். இதையேற்று அரசியலுக்கு வருவது குறித்து அறிவுஜீவிகள், மூத்த அரசியல்வாதிகளுடனும் கமல் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு தேவையான பணத்தை தனது ரசிகர்களும், பொதுமக்களும் கொடுப்பர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர் நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் அனைத்து மாவட்டங்களின் கமல் நற்பணி இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். இது வழக்கமாக கமல் இரு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தும் சந்திப்பு என்றாலும் இதில் அந்தந்த மாவட்டங்களில் கமலுக்கான ஆதரவு நிலைப்பாடு குறித்தும், அரசியல் வருகை குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications