அண்ணா, எம்.ஜி.ஆரைவிட பெஸ்ட் முதல்வர் காமராஜர்: கருத்துக்கணிப்பு
சென்னை: தமிழகத்தை ஆட்சி செய்ததில் சிறந்த முதல்வர் காமராஜர் என்று லயோலா கல்லூரி பேராசிரியர் குழு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான 'மக்கள் ஆய்வு' எனும் அமைப்பு அரசியல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கருத்து கணிப்பு நடத்தியது.
கருத்துக்கணிப்பு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. தமிழக மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள், அரசியல் கட்சிகளின் செல்வாக்கு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததை போலவே, நடிகர்கள் குறித்தும், இந்த அமைப்பு ஆய்வு செய்துள்ளது.
பெஸ்ட் சிஎம்
இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்களில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார் என்ற கேள்விக்கு, அதிகப்படியான மக்கள், அதுவும் கிட்டத்தட்ட பாதி அளவு மக்கள் காமராஜரைதான் கை காட்டியுள்ளார்கள்.
காங்கிரசை மீறிய சக்தி
பிடித்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு 46.5 சதவீதம் பேர் காமராஜரைத்தான் தங்கள் அபிமான முதல்வர் என்று தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு முற்றாக சரிந்து போய்விட்ட நிலையிலும், கட்சி சார்பற்று, காமராஜரை அனைத்து தரப்பும் கொண்டாடுவது இக்கருத்துக் கணிப்பு மூலம் தெரியவருகிறது.
எம்.ஜி.ஆர் 2வது
இந்த பட்டியலில், காமராஜருக்கு அடுத்தப்படியாக எம்.ஜி.ஆருக்கு 27.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆரின் சினிமா கதாப்பாத்திர ஈர்ப்பு மற்றும் அதிமுக கட்சிக்கு கணிசமான செல்வாக்கு இருந்தும், காமராஜருக்கு அடுத்த இடம் எம்.ஜி.ஆருக்கு கிடைத்துள்ளது.
அண்ணாவை முந்திய கருணாநிதி
பிடித்த முதல்வர்கள் பட்டியலில் 3வது இடம் கருணாநிதிக்கு கிடைத்துள்ளது. ஆனால், ஒற்றைப்படை எண்ணிலான மக்களே கருணாநிதியை தேர்ந்தெடுத்துள்ளனர். கருணாநிதிக்கு 8.7 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அண்ணாவுக்கு 4வது இடம்தான்
அதேநேரம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாவுக்கு 7.1 சதவீதம் பேர்தான் ஆதரவு அளித்துள்ளனர். கருணாநிதியும், ஜெயலலிதாவும், ஏன், எம்.ஜி.ஆருமே அண்ணாவை புகழ்பாடிய நிலையிலும், அவருக்கு 4வது இடம்தான் கிடைத்துள்ளது. அவர் கொண்டுவந்த திட்டங்கள் பற்றிய ஈர்ப்பு மக்களிடம் அதிகம் இல்லை என்பது இதில் இருந்து தெரிகிறது.
ஜெயலலிதாவுக்கு கடைசி இடம்
தற்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு இப்பட்டியலில் 5வது இடம் கிடைத்துள்ளது. பிடித்த முதல்வர் பட்டியலில் ஜெயலலிதா 4.4 சதவீதம் பேர் ஆதரவை பெற்றுள்ளார்.