சசிகலாவால் ஜெ.வுக்கு கெட்ட பெயர்... சோட்டா ராஜன் மாதிரி சரண்....டான் ஸ்ரீதரின் பரபரப்பு பேட்டிகள்
சென்னை: தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளியான காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர், சில மாதங்களுக்கு முன்னர் மும்பை நிழல் உலக தாதா சோட்டாராஜனைப் போல சரணடைய விரும்புவதாக கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு ஸ்ரீதர் ஒரு வீடியோ பேட்டி அளித்திருந்தார்.
அதில், தான் சரணடைய தயாராக இருப்பதாகவும், நியாயமான முறையில் விசாரணை நடைபெறும் என டிஜிபியும். ஏதாவது ஒரு நல்ல ஐஏஎஸ் அதிகாரியும் உத்தரவாதம் அளித்தால் தான் சரணடையத் தயார் என்றும் கூறியிருந்தார் ஸ்ரீதர்.
மேலும் தான் சரணடைந்தால் சுட்டுக் கொன்னுடுவாங்க; செத்துப் போயிருவேன்.. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் காட்ட வேண்டும். அதில் உண்மை இருந்தால் நானே சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வேன் எனவும் கூறியிருந்தார் டான் ஸ்ரீதர்.
இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு ஸ்ரீதர் அளித்த வீடியோ பேட்டி:
இதேபோல் ஜூனியர் விகடனுக்கு டான் ஸ்ரீதர் அளித்த பேட்டி:
கேள்வி: காஞ்சி சங்கராச்சாரியாருக்கு ஆதரவாக இருந்து, மேலாளர் சங்கரராமன் குடும்பத்தினரை நீங்கள் மிரட்டியதாகச் சொல்கிறார்களே?''
பதில்: சங்கரராமனின் மருமகன் கண்ணன், என் நெருங்கிய நண்பர். அப்படி இருக்கும் போது நான் எப்படி அந்தக் குடும்பத்தை மிரட்டுவேன். அந்தக் கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணை என்ற பெயரில் போலீஸார் என்னை டார்ச்சர் செய்தனர்.''
கேள்வி: எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தீர்கள்?''
பதில்: ஏழெட்டு ஆண்டுகள் இருந்தேன்.''
கேள்வி: எதிரிகளால் உங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?''
பதில்: எனக்கு யாரும் எதிரிகள் கிடையாது. எதிரிகளால் நான் தலைமறைவாக இருக்க வில்லை. போலீஸால்தான் தலைமறைவாக இருக்கிறேன். தமிழகத்தில் ஒருவன் பலமாக இருந்தால் அவனை வளர்த்துவிடவும், பலவீனமாக இருந்தால் போட்டுத்தள்ளவும் சில போலீஸார் இருக்கிறார்கள்.''
கேள்வி: நீங்கள் எப்படி பாதை மாறினீர்கள்?''
பதில்: நான் 7-ம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. சென்னைக்கு வந்து தியேட்டர்களில் ப்ளாக் டிக்கெட் விற்றேன். அப்போது போலீஸார் என்னைப் பிடித்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். தாத்தா, என்னை அங்கிருந்து வீட்டுக்குக் கூட்டிவந்து நெசவுத் தொழிலை கற்றுக்கொடுத்தார். அதில் போதுமான வருமானம் இல்லை. எனவே, சாராயத் தொழிலில் ஈடுபட்டேன். அப்படித் தான் பாதை மாறியது.''
கேள்வி: தமிழகத்துக்கு வருவீர்களா?''
பதில்: என்னுடைய பாஸ்போர்ட் காலாவதி யாகிவிட்டது. அதைப் புதுப்பிக்கவும் முடியாத நிலை உள்ளது. துபாயில் 2017-ம் ஆண்டு வரை பிசினஸ் விசா இருக்கிறது. அதன்பிறகு தமிழகத்துக்கு வருவது தொடர்பாக முடிவுசெய்வேன். நான் தமிழகத்துக்கு வரும்போது போலீஸார் தரப்பில் எனக்கு எந்த இடையூறும் இல்லை என்றால், சட்டரீதியாக என்னுடைய வழக்குகளைச் சந்திப்பேன்.''
கேள்வி: நீங்கள் அ.தி.மு.க-வின் உறுப்பினரா?''
பதில்: 20 ஆண்டுகளுக்கு முன்பே அ.தி.மு.க உறுப்பினராகச் சேர்ந்துவிட்டேன். நான் அரசியல் பண்ண வேண்டும் என்று நினைத்திருந்தால், பதவிகளைப் பெற்று இருப்பேன். அதேசமயம், அந்தக் கட்சியின் விசுவாசி என்றும், அம்மாவின் விசுவாசி என்றும் சொல்லமாட்டேன். தி.மு.க ஆட்சியில் அராஜகம் நடந்ததால் அம்மாவை எனக்குப் பிடிக்கும். சசிகலா குடும்பத்தினரால் மட்டுமே ஜெயலலிதாவுக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது. இதை நீங்கள் பதிவுசெய்தால், சசிகலா குடும்பத்தினரால் நான் பழிவாங்கப்படவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், உண்மையைச் சொல்ல வேண்டும் என்று இதைச் சொல்கிறேன்.''
கேள்வி: உங்கள் குடும்பத்தை போலீஸார் தொந்தரவு செய்தார்களா?''
பதில்: போலீஸாரின் தொந்தரவு காரணமாக கோவையில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த என்னுடைய மகன் படிப்பைத் தொடர முடியாமல் போனது. மேலும், காஞ்சிபுரத்திலிருந்த என்னுடைய மனைவியையும், மகளையும் துபாய்க்கு அழைத்து வந்துவிட்டேன்.''
கேள்வி: உங்களுக்கு 700 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?''
பதில்: எனக்கு சொத்து இருக்கிறது. அவற்றுக்கு அவ்வளவு மதிப்பா என்று எனக்குத் தெரியாது.''
கேள்வி: விலை உயர்ந்த கார்கள் வைத்திருக்கிறீர்களாமே?''
பதில்: ஆமாம். 'ஆடி' கார் கூட வைத்திருக்கிறேன். அது என் மகனுக்காக வாங்கியது. ஆனால், நான் எப்போதும் சிம்பிள்தான். பிளாட் பாரத்தில்தான் என் வாழ்க்கை தொடங்கிது என்பதை இப்போதும் மறக்கவில்லை. உலகத்தில் ஃபின்லாந்தில்தான் சிறந்த கல்வி வழங்கப்படுகிறது. அதுபோல, தமிழகத்திலும் மிகச்சிறந்த கல்வியை அளிக்க வேண்டும் என்பது என் கனவு. அது ஏழை மாணவர் களுக்கானதாக இருக்கும். அதற்கான பள்ளி, கல்லூரியைத் தொடங்குவதே என் லட்சியம். 'கல்விதான் சிறந்த செல்வம்' என்று திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்.''
இவ்வாறு டான் ஸ்ரீதர் கூறியிருந்தார்.