கந்த சஷ்டி: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்- குவியும் பக்தர்கள்
கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய அம்சமான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதால் திருச்செந்தூரில் பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவில் நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது. இதை முன்னிட்டு வெளி மாநில பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக கருதப்படுவது திருச்செந்தூர் ஆகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறும்.
தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
திருச்செந்தூர் முருகன் கோவில்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா கடந்த 20ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கபூர், இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் திருச்செந்தூர் வந்த பக்தர்கள் கடலில் நீராடி விரதம் தொடங்கி அங்கு தங்கி தொடர்ந்து வருகின்றனர்.
திருச்செந்தூரில் சூரம்சம்ஹாரம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 25ஆம் தேதியான நாளை மாலை நடக்கிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள், நண்பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாரதனை, 12.45 மணிக்கு தங்க சப்பரத்தில் ஜெயந்தி நாதர் யாகசாலையில இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மேலதாளங்கள் முழங்க சண்முக விலாசம் வருதல் நடக்கிறது.
குவியும் பக்தர்கள்
இதை முன்னிட்டு பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்த கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. கோவிலின் அருகில் கூடிய கூட்டங்கள் தலையா? கடல் அலையா என்று கேட்கும் அளவிற்கு பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
சுப்ரமணியர் திருக்கல்யாணம்
26ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடு ஆகியவை நடைபெறும். மாலை 6.30 மணியளவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் வைபவம், இரவில் திருக்கல்யாணம் நடைபெறும்.
போக்குவரத்து சீரமைப்பு
திருச்செந்தூருக்குள் வாகனங்கள் நுழைவதை தடுக்க தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து வரும் வாகனங்கள் குமாரபுரம் அருகிலும், தூத்துக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் வீரபாண்டியன்பட்டணம் தனியார் கல்லூரி அருகிலும் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு எஸ்பி மகேந்திரன் தலைமையில் திருச்செந்தூரில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.