கனிமொழிக்கு உடல்நலக்குறைவு- மருத்துவமனை விளக்கம்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் விரைவில் நலமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிமொழிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதாக கூறி அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
பின்னர் கனிமொழியின் உடல் நலம் தொடர்பாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கனிமொழி எம்.பி., ஞாயிற்றுக்கிழமை காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடலளவிலும் மனதளவிலும் சோர்வாகக் காணப்பட்டார். கனிமொழிக்கு ஏற்பட்டுள்ள மயக்கம் மற்றும் உடல் சோர்வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குளுகோஸ் செலுத்தப்பட்டது.
சில நாட்கள் முழுமையான ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு அவரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுமையாக நலமடைந்து விரைவில் மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்புவார்.
இவ்வாறு காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.