மு.க. அழகிரி குறித்த கேள்வி.... செய்தியாளர்களிடம் சீறிய கனிமொழி!!
கோவை: மு.க. அழகிரி மீண்டும் திமுகவில் இணைவாரா? என்ற செய்தியாளர்களின் கேள்வியால் கோபமடைந்த திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி, மைக்குகளை தட்டி விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. மகளிர் அணி சார்பில், அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடு, ஊழல், விலைவாசி உயர்வை கண்டித்தும், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பழ.கருப்பையா வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத் துக்குரியது. அ.தி.மு.க.விற்கு இது புதியதில்லை என்றாலும், எதிர்கருத்து கொண்டவர் என்பதற்காக தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது என்றார்.
மேலும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேவையான போது கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் கனிமொழி தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள், மு.க. அழகிரியின் பிறந்த நாளையொட்டி, அவர் மீண்டும் தி.மு.க.வில் இணைவார் என சொல்லப்படுகிறதே? என கேட்டனர்.
இதற்கு பதிலளிக்க மறுத்த கனிமொழி, கோபத்தோடு செய்தியாளர்களின் மைக்குகளை தட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு விறுவிறுவென்று நகர்ந்தார். இதனால் செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications