அண்ணன் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய தங்கை கனிமொழி
சிவகங்கை: மு.க. ஸ்டாலின் தனது நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் போது, சிவகங்கை மாவட்ட கிராம மக்களுக்கு கொடுத்த ஒரு வாக்குறுதியை அவரது தங்கை கனிமொழி நிறைவேற்றியுள்ளார்.
தி.மு.க பொருளாளர் ஸடாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த போது, மதகுபட்டி அருகே உள்ள ஆலவிலாம் பட்டி என்ற கிராமத்திற்கு சென்று இருந்தார். அந்த கிராமத்தில் மது அருந்தவும், மது அருந்தியவர்கள் கிராமத்தில் நுழையவும் கூடாது, மேலும் வரதட்சணையும் தடைசெய்யபட்ட கிராமம் அது என்பதை அங்கிருந்த கிராம மக்கள் ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த ஸ்டாலின், உங்கள் கிராமத்திற்கு என்ன தேவை? என்று கேட்டபோது திருமண மண்டபம் வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கிராமத்தில் திருமண மண்டபம் கட்ட ஸ்டாலின் தனது தங்கையும் ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழியிடம், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி கேட்டார். கனிமொழியும் அதற்கு, சம்மதம் தெரிவித்து, தனது நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாயை திருமண மண்டபம் கட்ட ஒதுக்கீடு செய்தார்.
அந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் இன்று சிவகங்கை வந்த கனிமொழி, திருமண மண்டபத்திற்கான அடிக்கல்லை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் உங்கள் கிராமத்தின் மது, வரதட்சணை கொள்கை தமிழகத்திற்கே முன்மாதிரியாக உள்ளது. உங்கள் கிராமத்திற்கு கண்டிப்பாக திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்று அண்ணன் சொல்லியதால் நானும் எனது நிதியில் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன் என்று கூறினார் கனிமொழி.
இதனையடுத்து சிவகங்கையில் உள்ள கலைஞர் மாளிகையில் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து குறை கேட்ட கனிமொழி, மாலையில் திருப்புத்தூர் சன்மீனா திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான மகளிரணியினருடன் கலந்துரையாடினார்.












Click it and Unblock the Notifications