தூக்கு தண்டனையை ஒழிக்க நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா: கனிமொழி உறுதி
சென்னை: இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிக்க வகை செய்யும் தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

யாகூப் மேமனுடன் சேர்த்து இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னரும் நம்மில் ஒருவரது உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூக்கு தண்டனை என்பது மனிதநேயமற்ற செயல்.
தூக்கு தண்டனைக்கு தி.மு.க. எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என 2014ஆம் ஆண்டு திருச்சி தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க.வின் லோக்சபா தேர்தல் அறிக்கையிலும் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தூக்கு தண்டனையை ஒழிக்க வகை செய்யும் தனிநபர் தீர்மானம் மற்றும் மசோதாவை நான் கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வேன்.
140 க்கும் மேற்பட்ட நாடுகளில் தூக்கு தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையும் மீண்டும் மீண்டும் இந்த நடைமுறையை கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்கிறது.
Statement on Death Penalty
India witnessed its third execution in three years. A lengthy legal process and... http://t.co/p9zuAKIgvs
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 30, 2015 இந்தியாவின் சட்ட ஆணையமும் கூட தூக்கு தண்டனையை ஒழிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் முன்வைத்து விவாதிக்கப்படும் வரும் வரை தூக்கு தண்டனையை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்; கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதையும் ஜனாதிபதியும் நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications