தமிழகத்தில் போலீஸ்காரருக்கே பாதுகாப்பு இல்லையாம், இதில் பொதுமக்களுக்கு எப்படி?- கனிமொழி
வேலூர்: தமிழகத்தில் போலீஸ்காரருக்கே பாதுகாப்பில்லை. இதில் பொதுமக்களுக்கு அரசு எப்படி பாதுகாப்பு அளிக்கும் என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலத்தில் திமுக சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி. அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோவுக்கு ஆதரவாக பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

அதிமுக அரசு
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை முடக்குவதிலேயே ஜெயலலிதா முனைப்புடன் உள்ளார். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 10 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

மக்கள்
திமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட பல நலத்திட்டங்கள் மற்றும் உதவி திட்டங்களை மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்.

விலைவாசி
தற்போதைய ஆட்சியில் விலைவாசி விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை சரி செய்வேன் என்று ஜெயலலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் மின்தட்டுப்பாடு தீரவில்லை மாறாக படுமோசமடைந்துள்ளது.

அம்மா உணவகம்
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுகளுடன் வருவோரில் பாதிப் பேருக்கு பொருட்கள் கொடுத்துவிட்டு மீதமுள்ளோரை திருப்பி அனுப்புகிறார்கள். ரேஷன் கடை பொருட்கள் அன்னிய மார்க்கெட்டிற்கும், அம்மா உணவகத்திற்கும் தான் செல்கிறது.

குடிநீர்
அம்மா குடிநீர் என்ற பெயரில் குடிநீர் விற்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்கு நலத்திட்டங்களை செய்ய வேண்டிய அரசு வியாபாரம் செய்கிறது. இத்தகைய வியாபார அரசு நமக்கு தேவையா என்று நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது. இவ்வளவு ஏன் போலீஸ்காரரின் வீட்டிலேயே கொள்ளை நடக்கிறது. ஒரு போலீஸ்காரருக்கே பாதுகாப்பு இல்லை எனில் பொதுமக்களுக்கு எப்படி அரசு பாதுகாப்பு அளிக்கும் என்றார் கனிமொழி.












Click it and Unblock the Notifications