குமரி மாவட்ட தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனைகள்
குமரி: புத்தாண்டு பிறப்பையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இரவு 12 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நாகர்கோவில் சவேரியார் ஆலயத்தில் இரவு 11 மணி முதல் 12 மணி வரை நன்றி அறிவிப்பு நற்கருணை ஆராதனை நடந்தது.
12 மணிக்கு புத்தாண்டு கூட்டு திருப்பலி, கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடந்தது. அவருடன் மறை மாவட்ட பொருளாளர் பெர்ஜியோ மறைவட்ட முதன்மை பணியாளர் ஆல்பர்ட், ஆலய பங்கு தந்தை ஜான் ராபர்ட் ஜூலியஸ், அருட்பணி ஜோஸ் ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.
நாகர்கோவில் ஹோம் சர்ச்சில் நடந்த புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனையில் சி.எஸ்.ஐ. பிஷப் தேவகடாட்சம் கலந்து கொண்டார். பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் அசிசி ஆலயத்தில் நடந்த பிரார்த்தனையில் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் கலந்து கொண்டார். வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம் மற்றும் கன்னியாகுமரி, மார்த்தாண்டம், குளச்சல், களியக்காவிளை, தக்கலை பகுதிகளில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
பிரார்த்தனையை தொடர்ந்து அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் இரவு 12 மணிக்கு பட்டாசுகள் வெடித்தும், வாண வேடிக்கைகள் நிகழ்த்தியும் கொண்டாடினார்கள். புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்கு அலங்காரத்தால் ஜொலித்தது.