கொந்தளிப்பில் மீனவர்கள்- குளச்சலில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்டு போராட்டம்
குளச்சலில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்டு பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்: ஓகி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க போதுமான நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி குளச்சல் மீனவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓகி புயல் தாக்கி 10 நாட்களை கடந்த பின்னமும் கரை திரும்பாத மீனவர்கள் குறித்த தகவல் எதுவும் இல்லை. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரே 601 மீனவர்களைக் காணவில்லை என கூறியுள்ளார்.
இதனால் கன்னியாகுமரியில் மிகப் பெரிய உயிரிழப்பும் சேதமும் ஏற்பட்டிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. அத்துடன் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மீனவர் கிராமங்களுக்கு சென்று பார்வையிடாமல் அரசியல் ரீதியாக கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் ஓகியில் சிக்கி பலியான மீனவர் ஜான்டேவிட்டின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற பொன். ராதாகிருஷ்ணன் இன்று குளச்சல் வருகை தந்தார். அப்போது அவரை முற்றுகையிட்டு மீனவர்கள் ஆவேச முழக்கத்துடன் போராட்டத்தை நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.