சாத்தான்குளம் இடைத்தேர்தலில் தொடங்கிய ஏறுமுகம்...குமரி வேட்பாளரான ஜான் தங்கம்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்தங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜான்தங்கம் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். குமரி மாவட்டத்தில் நாடார் சமூக ஓட்டுக்கள் அதிகம் என்பதால் அதே சமூகத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்துள்ளார் ஜெயலலிதா,
இவரது தந்தை பெயர் டேனியல் நாடார், தாயார் சொர்ணம். வேட்பாளர் ஜான்தங்கத்திற்கு ஒரு அண்ணனும், இரண்டு சகோதரிகளும் உண்டு. இவரது மனைவி பெயர் சுதா (40). இவர்களுக்கு ஆசிகா (14) என்ற மகளும், ஜெரின் டேனியல் (7) என்ற மகனும் உள்ளனர்.

ஜெயாவின் குட்புக்கில்
வேட்பாளர் ஜான்தங்கம் 2001-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்தார். தொடர்ந்து அந்த கட்சியில் ஒன்றிய பிரதிநிதியாக பொறுப்பேற்றார். அப்போது, நடந்த சாத்தான்குளம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்காக பாடுபட்டதால் ஜெயலலிதாவின் குட்புக்கில் இணைந்தார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் மேல்புறம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மாவட்ட செயலாளராக நியமனம்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவரை அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா, குமரி மேற்கு மாவட்ட செயலாளராக நியமித்தார். அப்போது நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் குமரி மாவட்ட ரப்பர் வளர்ப்போர் மற்றும் உற்பத்தியாளர், விற்பனை சங்க தேர்தலில் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
குமரி லோக்சபா வேட்பாளர்
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு இவரை தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய தலைவராக நியமித்தது. தற்போது இவர் அ.தி.மு.க.வின் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளர்களின் நலன்
குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனை அருகே கடையாலுமூட்டில் 1968 -ல் பிறந்தவர் ஜான்தங்கம். ரப்பர் தோட்டங்கள் அதிகமாக உள்ள மலையோர கிராமம் என்பதால் தோட்ட தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தொழிலாளர்கள் இடையே நல்ல செல்வாக்கு பெற்றுள்ளார். அதிமுகவில் படிப்படியாக உயர்ந்து தற்போது லோக்சபா எம்.பி. வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications