நடனம், நடிப்பு, நாடகம்... அமர்க்களாக நடந்த காரைக்குடி நகராட்சிப் பள்ளி விருது வழங்கும் விழா
காரைக்குடி: கார்ப்பரேட் பள்ளிகளின் கண்கவர் ஆண்டு விழாவைப் பார்த்திருப்போம்.. ஆடம்பரமான நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்போம்.. ஆனால் ஒரு நகராட்சிப் பள்ளி கொண்டாடிய அருமையான விருது வழங்கும் விழாவைப் பார்த்திருக்கீங்களா.. காரைக்குடியில் அப்படி ஒரு அட்டகாசமான விழா நேற்று முன்தினம் நடந்தது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியின் 2 ம் ஆண்டு விருது வழங்கும் விழா காரைக்குடி சுபலெட்சுமி மகாலில் 25.02.16 அன்று அழகப்பா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா தலைமையில் நடைபெற்றது.
தனியார் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் பிரமிப்பூட்டும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

எம்.எல்.ஏ. சோழன் சித.பழனிச்சாமி
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சோழன் சித.பழனிச்சாமி, நகர்மன்ற தலைவர் திருமதி. கற்பகம் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் சென்ற கல்வியாண்டில் 10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி அவர்கள் கல்வியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

சிறந்த மாணவர்களுக்கு விருதுகள்
தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து சிறந்த மாணவர்களுக்கான விருதுகளை வழங்கினார். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர் மாணிக்கம் ஆசிரியர்களுக்க்கான விருதுகளை வழங்கினார். சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மாங்குடி அவர்கள் சிறந்த தகவல் பலகைக்கான விருதை வழங்கினார்.

நூறு சதவீத வருகைக்கு விருது
பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழுத் தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆகியோர் நூறு சதவீத வருகைக்கான விருதுகளை வழங்கினார்கள்.

சிறந்த வகுப்புக்கான விருது
தமிழ்நாடு தலைமையாசிரியர் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி சிறந்த வகுப்பிற்கான விருதை வழங்கினார். மக்கள் மன்றத் தலைவர் ராசகுமார், பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி,சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திர மோகன், காரைக்குடி நகரமன்ற துணைத்தலைவர் திரு.மெய்யப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாணவர்களின் சபாஷ் பட்டிமன்றம்!
மாணவர்களை நல்வழிப்படுத்த பெரிதும் உதவுவது கனிவா? கண்டிப்பா? என்ற தலைப்பில் மாணவர்கள் பட்டிமன்றம் நடத்தினர்.

நடனம் - தனி நபர் நடிப்பு
மாணவர்களின் நடனம், தனி நபர் நடிப்பு , நாடகம் மற்றும் நகைச்சுவை என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

ஆசிரியர்கள் பட்டாளம்
பட்டதாரி ஆசிரியர்கள் கோமதி மற்றும் மீனாட்சி ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். பட்டதாரி ஆசிரியர்கள் கோமதி ஜெயம் மற்றும் கீதா சுந்தரேஸ்வரி ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இறுதியில் பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி நன்றியுரையுடன் விழா இனிதே முடிவுற்றது.












Click it and Unblock the Notifications