காரைக்குடி மாணவர்களின் கலக்கலான மௌனக் கலைக் கண்காட்சி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 27.11.15 அன்று மௌனக் கலை கண்காட்சிப் போட்டிகள் நடைபெற்றது.
இக்கண்காட்சி காரைக்குடி நகராட்சி தலைவர் கற்பகம் இளங்கோ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அழகப்பா பல்கலைகழக பண்பாட்டு மன்றத் தலைவர் பேராசிரியர் டாக்டர். ஜோதிபாசு முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். பள்ளி கிராமக் கல்விக்குழுத் தலைவர் கரு. ஆறுமுகம், பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் அழகு சுந்தரி மற்றும் பெற்றோர்கள் பலர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

கண்காட்சி போட்டி நடுவர்களாக பாரதி நகர்மன்ற நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை வனிதா, சின்னையா அம்பலம் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கௌரி, கார்த்திகேயன் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியை தென்றல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் "இன்றைய சமுதாய பிரச்சனைகள், காடுகளை அழித்தல், பெண்கள் நல முன்னேற்றம், இராமர் பட்டாபிஷேகம், இயேசு கிறிஸ்து பிறப்பு ஆகிய தலைப்புகளில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் மௌனமாக சிலை போன்று நின்று கொடுக்கப்பட்ட தலைப்பிற்கான கருத்தை தெளிவாக விளங்க வைக்கும்படி செய்திருந்தனர்.

இதில் ராமர் பட்டாபிஷேகம் மிக பிரமாண்டமாக அமைந்திருந்தது. அதை பார்க்கும்போது ராமர் பட்டாபிஷேகத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் மாணவர்களும், அவ்வகுப்பு ஆசிரியர் கோமதி ஜெயம் அவர்களும் செய்திருந்தனர்.
பெண்கள் நல முன்னேற்றத்தில் அக்காலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள், பால்ய விவாகம், வன்கொடுமை மற்றும் இக்காலத்தில் பெண்களில் கல்வி அறிவால் அவர்களின் உயர்வு ஆகியவற்றை பற்றி 7 ம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர் சித்ரா அவர்களும், சிறப்பாக செய்திருந்தனர்.

காடுகளை அழிப்பதால் நீர் ஆதாரமும், நாட்டின் வளமும் எவ்வாறு குறைகிறது என்பதை 6 ம் வகுப்பு மாணவர்களும் அவர்களின் ஆசிரியர் தேன்மொழி அவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
இயேசு கிறிஸ்து பிறப்பை 6 பி மாணவர்களும் அவ்வகுப்பு ஆசிரியர் சுனிதா மற்றும் அருள்மேரி சேர்ந்து சிறப்பாக செய்திருந்தனர். இதே போல் இன்றைய சமுதாய பிரச்சினை என்ற தலைப்பில் நெகிழி பயன்பாடு ஊழல், விதிமீறல், வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் இளையதலைமுறையின் சீரழிவு ஆகியவற்றை கண்முன்னே 7பி வகுப்பு மாணவர்களும் அவற்றின் ஆசிரியர் மீனாட்சி அவர்களும், செய்திருந்தனர்.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியை கோமதி அவர்கள் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications