அமித்ஷா ஒரு உளறலை வச்சே காங். ஆதரவை அள்ளி விடுமே.. அச்சத்தில் கர்நாடக பாஜக!
அமித்ஷாவின் உளறலை வச்சே காங்கிரஸ் கட்சி மக்கள் ஆதரவை அள்ளிவிடும் என்று கர்நாடக பாஜக அச்சத்தில் உள்ளது.
Recommended Video
சென்னை: எடியூரப்பா குறித்து அமித்ஷா உளறியதை வைத்தே காங்கிரஸ் கட்சி மக்கள் வாக்குகளை அள்ளி விடுமோ என்ற அச்சத்தில் கர்நாடக மாநில பாஜக உள்ளது.
கர்நாடக மாநிலத்துக்கு வரும் மே 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவில் எங்கு பார்த்தாலும் காவி நிறம் காட்சியளிப்பதாக கூறிக் கொள்ளும் பாஜக கர்நாடகத்திலும் ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது.
இதற்காக உச்சநீதிமன்றம் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நேரிட்டால் கர்நாடக தேர்தலில் ஜெயிக்க முடியாமல் போய்விடும் என்பதற்காக தமிழகத்தின் கோரிக்கை மத்திய பாஜக அரசு ஏற்க மறுக்கிறது.
ஆட்சியை தக்க வைத்து கொள்ள...
காவிரி விவகாரத்தில் தங்கள் மாநிலத்துக்கு மக்களுக்காக போராடி காவிரி நடுவர் மன்றம் வழங்கியதை காட்டிலும் அதிக அளவு தண்ணீரை பெற்று தந்துள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் சித்தராமையா. அதுபோல் லிங்காயத்துக்களுக்கு தனி மத அடையாளத்தையும் பெற்று தந்துள்ளார். பெரும்பாலான மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளதால் இந்த தேர்தலில் எப்படியாயினும் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது.
உளறல்
மாநில தேர்தலுக்காக அமித்ஷா கர்நாடக மாநிலத்தில் முகாமிட்டுள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார். மேலும், மிக மோசமான ஊழல் அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுக்குதான் முதலிடம் என அமித்ஷா கூற அருகே இருந்த பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து சித்தராமையா அரசு என திருத்தினர்.
பாஜகவுக்கு தோல்வி
கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரப்போகிறது என்று சிஃபோர் அமைப்பு நடத்திய சர்வேயில் தெரிகிறது. காங்கிரஸ் 126 தொகுதிகளை வென்று அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்றும், பாஜக தற்போதுள்ள 43 எம்எல்ஏக்கள் என்ற நிலையில் இருந்து சற்று முன்னேறி 70 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், ம.ஜ.த 27 தொகுதிகளை வெல்லும் எனவும் அந்த சர்வே கணித்துள்ளது. இதனால் அந்த மாநில பாஜக சற்று அச்சத்தில் உள்ளது.
அச்சத்தில் மாநில பாஜக
இந்நிலையில் எடியூரப்பா அரசு ஊழலில் முதலிடம் என்று அமித்ஷா உளறியதால் காங்கிரஸ் அரசுக்கு இது கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டால் பதவியை இழந்த எடியூரப்பாவை அவர் சொந்த கட்சிக்காரரே ஊழல்வாதி என்று கூறியுள்ளதால் அந்த மாநில பாஜக கடும் அச்சத்தில் உள்ளது. மேலும் காங்கிரஸ் மானத்தை கப்பல் ஏற்றுவதாக நினைத்துக் கொண்டு முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி விட்டாரே என்று மாநில பாஜக கடும் அதிருப்தியில் உள்ளது. பொது இடத்தில் உணர்ச்சிவசப்பட்டால் இதுதான் நிலை என்று அவர்கள் முணுமுணுக்கின்றனர்.