தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் வழங்க இயலாது: தமிழக அரசுக்கு கர்நாடகா கடிதம்
சென்னை: தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க சாத்தியம் இல்லை என்று கூறி தமிழக அரசுக்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் கவுசிக் முகர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தின் நகல் கர்நாடக அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் கவுசிக் முகர்ஜி ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில், "கர்நாடகத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. பருவமழை வழக்கத்தை விட 30 சதவீதம் குறைந்துவிட்டது. மழை சரியாக பெய்யாததால் அணைகளில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லை. தற்போது உள்ள தண்ணீர் குடிநீருக்கு தான் போதுமானதாக இருக்கும். எனவே, தமிழ்நாட்டிற்கு நடுவர் மன்ற தீர்ப்புப்படி வழங்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட சாத்தியம் இல்லை. இடர்பாட்டு காலத்தில் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைப்படி தண்ணீர் திறந்துவிடப்படும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இதற்கிடையே கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் அங்கு மூத்த வக்கீல் பாலி நாரிமனை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசினார்.












Click it and Unblock the Notifications