அந்தியூர் அருகே கர்நாடக வாகனங்களை சிறைபிடித்த கொங்கு நாடு மக்கள் கட்சியினர்
அந்தியூரில் கர்நாடக வாகனங்களை சிறைபிடித்த கொங்கு நாடு மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்
அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கர்நாடக வாகனங்களை சிறை பிடித்து கொங்குநாடு மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதன் உச்சகட்டமாக சென்னையில் நடந்த ராணுவக் கண்காட்சியைத் திறந்து வைக்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று தமிழக - கர்நாடக எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் என்கிற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் கர்நாடக வாகனங்களை வழிமறித்து சிறைபிடித்த கொங்குநாடு மக்கள் கட்சியினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வராவிட்டால் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications