எதிரிகள் அழிய பிரத்யங்கிராதேவி கோவிலில் யாகம் நடத்திய கார்த்தி சிதம்பரம்!

சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் பிரத்யங்கிராதேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்று வணங்கினால் இழந்த செல்வம், புகழ், பணம் போன்றவை கிடைக்கும் என்ற நம்பிக்கை காலங்காலமாக உள்ளது.
மேலும், யாகம் வளர்த்தால் எதிரி அழிந்து போவார்கள் என்றும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக இந்த கோவிலுக்கு சாதாரண பக்தர்களை காட்டிலும், பிரபல அரசியல் தலைவர்கள் மிகவும் ரகசியமாக வந்து சாமி தரிசனம் செய்வதும், யாகம் வளர்ப்பதும் நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் அமாவாசை அன்று நடைபெறும் மிளகாய் வத்தல் யாகம் வழக்கத்திற்கு மாறாக நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 8.30 மணி வரை நடைபெற்றுள்ளது. இதில் 20 வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளரான கோட்டையூர் நெல்லியான் முன்னிலையில் யாகம் நடைபெற்றது.
இந்த யாகம் குறித்து கோட்டையூர் நெல்லியான் கூறுகையில், வெற்றிக்கு வழி வகுக்கும் வகையில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக இந்த யாகம் நடத்தப்பட்டது. அவர் இந்த யாகத்தில் பங்கேற்க முடியவில்லை. அதனால் நான் முன்னின்று கலந்து கொண்டு யாகம் நடத்தினேன் என்றார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் மத்திய நிதி அமைச்சர் குடும்பத்தில் இருந்து யாகம் வளர்த்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications