நெருங்கும் கார்த்திகை திருவிழா: அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்
நெல்லை: கார்த்திகை திருவிழா நெருங்குவதையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான திருக்கார்த்திகை தீபவிழா வரும் டிசம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகுபடுத்துவது வழக்கம். இதுபோல் கோவில்களிலும் பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவர்.
இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. நெல்லை அருகே உள்ள மாவடியிலும் அகல் விளக்குகள் தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மாவடியை சேர்ந்தவர் ஆறுமுகநம்பி. இவர் தலைமுறை, தலைமுறையாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இவரிடம் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். உணவருந்தும் தட்டு, பானை, அடுப்பு மற்றும் சமையலுக்கு தேவையான உபகரணங்கள் மண்ணால் கண்களை கவரும் வகையில் கலைநயத்துடன் தயார் செய்து வழங்கி வருகிறார்.
தற்போது திருக்கார்த்திகை தீபவிழா நெருங்கி வரும் நிலையில் அகல் விளக்குகள் தயாரிப்பு பணி களை கட்டி வருகிறது. சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பல தரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
ரூ.1 முதல் ரூ.10 வரையிலும் பலவிதமான விளக்குகள் உள்ளன. இந்த விளக்குகள் நெல்லை, தூத்துக்குடி, குமரி, மதுரை, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.