எர்செல்-மேக்சிஸ் பணம் மூலம் 14 நாடுகளில் முதலீடு? பயோனீர் செய்திக்கு கார்த்தி சிதம்பரம் மறுப்பு
சென்னை: சர்ச்சைக்குரிய எர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் மூலம் ஆதாயமடைந்த பணத்தையே 14 நாடுகளில் தாம் முதலீடு செய்திருப்பதாக அமலாக்கப்பிரிவின் ஆவணங்களை சுட்டிக்காட்டி பயோனீர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்துள்ளன. அதே நேரத்தில் இந்த ஒப்பந்த விவகாரத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றன.

இந்த ஒப்பந்த விவகாரத்தில் நடைபெற்ற பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவும் அண்மையில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தின.
இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த ஆவணங்களில் லண்டன், துபாய், பிரிட்டிஷ் வர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிஸ், கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கார்த்திசிதம்பரம் பல லட்சும் கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளதாக ஆங்கில நாளேடு பயோனியர் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மேலும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 'அட்வான்டேஜ் ஸ்ட்ரடிஜிக் கன்சல்டிங்' நிறுவனத்தின் துணை நிறுவனம் மூலம் 14 நாடுகளில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் பணமோசடி தடுப்பு கூட்டறிக்கையின் கீழ், இந்த 14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் செய்துள்ள முதலீடுகள் குறித்த ஆவணங்களைப் பெறுவதற்கு அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சட்டவிதிகளுக்கு உட்பட்டேநான் தொழில்நிறுவனங்களை நடத்தி வருகிறேன். என் மீதான புகாரில் எந்த உண்மையும் இல்லை என ஏற்கனவே பல முறை விளக்கம் தரப்பட்டுள்ளது என சுருக்கமாக 4 வரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications