கார்த்தி சிதம்பரம் முன்னிலையில், அவரது அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் தொடர் சோதனை
சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ சோதனை நடைபெற்ற நிலையில் கார்த்தி சிதம்பரம் அவரின் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
தொழிலதிபர் பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் செய்த பெரும் முதலீடு விவகாரத்தில் கார்த்தி பெயரும் அடிபட்டது தொடர்பாக இந்த ரெய்டு நடைபெற்றது.

2007-08ம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு இது என சிபிஐ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஒப்புதல் வழங்கியதற்கு பரிசாக கார்த்தி சிதம்பரத்திற்கு, மேற்சொன்ன மீடியா குழுமம், ரூ.90 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சோதனை முடிவில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று, கார்த்தி நிருபர்களிடம் தெரிவித்தார். அதேநேரம், கார்த்தியை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரின் அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஏதேனும் ஆவணங்கள் கிடைக்கலாம் என சிபிஐ அதிகாரிகள் கருதுகிறார்கள்.
கார்த்தியின் கைரேகை வைத்தால் மட்டுமே திறக்கும் வகையில் கார்த்தி அலுவலகத்தில் சில அறைகள் இருப்பதாகவும், எனவேதான் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சிபிஐ நடவடிக்கை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சிதம்பரம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
சிபிஐ சோதனையின்போது, ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ள நிலையில், அவர் கைது செய்யப்படுவாரா அல்லது விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications