கருமுத்து கண்ணன் மறைவு! உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் பிடிஆர்! யாருக்கு யார் ஆறுதல்!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் மறைவையொட்டி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
அமைச்சர் பிடிஆர் ஒரு பக்கம் கண் கலங்கி அழுதுகொண்டிருந்த நிலையில் அவரது கையை பற்றியபடி கருமுத்து கண்ணனின் மகன் மற்றொரு பக்கம் அழுததால் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது எனத் தெரியாமல் அவர்கள் இருவரும் நின்றனர்.

மதுரை மீனாட்சியம்மனின் தீவிர பக்தரான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கோவில் தக்கார் மறைவால் கண் கலங்கி மனம் பரிதவித்து காணப்படுகிறார்.
கருமுத்து கண்ணனை பொறுத்தவரை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தான் ஃபார்மாலிட்டிக்காக அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து உடனே புறப்படாமல் கருமுத்து கண்ணன் வீட்டில் 15 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்து அவர்கள் குடும்பத்தினரிடம் தனது துக்கத்தை பகிர்ந்துகொண்டார்.
எதற்கும் கண் கலங்காத அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கருமுத்து கண்ணனின் உடலை பார்த்ததும் கண் கலங்கி மனம் கேட்காமல் அழுதுவிட்டார்.

2006 ல் திமுக ஆட்சி அமைந்ததும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக கருமுத்து கண்ணன் நியமிக்கப்பட்டார். இவரை அந்தப் பதவிக்கு நியமிக்க பரிந்துரை செய்து நடவடிக்கை எடுத்தவர் அமைச்சர் பிடிஆரின் தந்தையும் அப்போதைய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சருமான பழனிவேல் ராஜன்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் தக்காராகப் பல ஆண்டுகள் பணியாற்றி, கோயில் புனரமைப்புப் பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டு மதுரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கருமுத்து கண்ணன்.
மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி இயக்குநராகப் பொறுப்பு வகித்துப் பல ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் இவர் உதவி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications